உலகம்

தினமும் 2 நிமிடங்களுக்கு முன்பாகவே கிளம்பிச்சென்ற ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜப்பான் அரசு!

உலகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு நேரக்கட்டுப்பாடுகள் உள்ளன. தொழிலாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு வரவில்லை என்றாலோ அல்லது சீக்கிரம் சென்றாலோ அவர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜப்பானில், அரசு அலுவலர்கள் 2 நிமிடத்திற்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு வெளியேறிவிட்டதால் அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதத்தை பிடித்துள்ளது ஜப்பான் அரசு.

ஜப்பானில் உள்ள புனபாஷி நகர கல்வி வாரியத்தைச் சேர்ந்த ஊழியர்கள், 5:15 மணிக்கு வெளியே செல்வதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் இரண்டு நிமிடங்கள் முன்னதாகவே வெளியே செல்வதை அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும் இப்படி 2019 முதல் ஜனவரி 2021 வரை இப்படி அதிகம் நடைபெற்றுள்ளது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, 59 வயது கொண்ட மூத்த ஊழியர் ஒருவர் உதவி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து நிறுவனம் அவருக்கு மூன்று மாத சம்பளத்தில் 10 விழுக்காடு பிடித்தம் செய்தது. மேலும், இரண்டு மூத்த ஊழியர்களுக்கு எழுத்துப்பூர்வமாக எச்சரிக்கை கொடுத்தனர். மேலும் 4 பேரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கூறுகையில், 5.17 மணியளவில் வரும் பேருந்தை நாங்கள் பிடிக்கவில்லை என்றால், அடுத்த பேருந்து 5.47க்குத் தான் வரும். அதுவரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் தான் நாங்கள் 2 நிமிடம் முன்னதாகவே சென்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக 2018ம் ஆண்டில், அரசு ஊழியர் ஒருவர் மூன்று நிமிடங்களுக்கு முன்பே மதிய உணவு சாப்பிட்டதால் அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “அம்பானியின் மனைவியாக இருப்பதெல்லாம் சாதனையா?” - வருகைதரு பேராசிரியராக நியமித்ததற்கு மாணவர்கள் எதிர்ப்பு!