உலகம்

கத்தியைக் காட்டி prank show செய்த வாலிபர் சுட்டுக்கொலை : இதுபோன்ற முட்டாள்தனத்துக்கு தடை கோரும் மக்கள்

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின், நாஷ்வில்லி என்ற நகரத்தில் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் மக்கள் தங்களின் பொழுதுகளைக் கழித்துக் கொண்டிருந்தனர். அப்போது, டிமோத்தி வில்க்ஸ் என்பவர் நண்பர் ஒருவருடன் கையில் பெரிய கத்தியுடன் பொதுமக்களை நோக்கி கொள்ளையடிப்பது போல் ஓடிவந்துள்ளார்.

அப்போது இதைப்பார்த்து அதிர்ச்சியும், பதட்டமும் அடைந்த ஒருவர், தற்காப்பு நடவடிக்கையாக தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் வில்க்ஸை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் சிதறி ஓடினர்.

இதனையடுத்து இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, கொலை தொடர்பாக வில்க்ஸனின் நண்பரிடம் விசாரணை நடத்தியதில், “நாங்கள் யூடியூப் பக்கம் ஒன்று நடத்துகிறோம். இதற்காக மக்களிடம் கத்தியைக் காட்டி கொள்ளை அடிப்பதுபோல் “ப்ராங்க்” செய்ய முயன்றோம். அப்போது தான் இந்த கொடூர சம்பவம் நடந்துவிட்டது” என அழுதுகொண்டே கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் தங்களின் யூடியூப் பக்கங்கள் அதிகமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகப் பேய் வேடமிட்டும், கத்தியைக் காட்டி மிரட்டுவது என பல வடிவங்களில் மக்களை பீதியடைய வைக்கும் வித்தில் prank show நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கூட நிறைய prank show நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இளைஞர்களிடம் கருத்து கேட்கிறேன் என்ற பேர்வழியில், ஆபாசமான கேள்விகளைக் கேட்டு அதை சமூக வலைத்தளங்களிலும் வெளியிடுகிறார்கள். இது சமூகத்தில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும், அவர்கள் குடும்பம் இதை எப்படி எதிர்நோக்கும் என்பதைப் பற்றி கவலைப்படாமல் யூடியுப் பக்கத்தை நடத்திவருகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

சமீபத்தில் கூட ஒரு பெண் ஆபாசமாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அடிப்பையில், கேள்வி கேட்ட நபரையும், ஒளிப்பதிவாளரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் அமெரிக்காவில் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது யூடியுப் ப்ராங்ஸ்டர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.