உலகம்

“தேர்தலில் தோற்றால் நாட்டை விட்டே வெளியேறுவேன்” : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு!

அமெரிக்காவில் வரும் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜோர்ஜியா மாகாணத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ட்ரம்ப், ”ஜனாதிபதி தேர்தல் அரசியல் வரலாற்றில் மிக மோசமான வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிடுவது எனக்கு அழுத்தம் கொடுக்கிறது என்றும், நான் தோற்பதை உங்களால் கற்பனை செய்யமுடியுமா? நான் என்ன செய்யப் போகிறேன்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றால், வரலாற்றிலேயே மிக மோசமான வேட்பாளரிடம் தோல்வி அடைந்த எனது வாழ்க்கையே வீண் எனக் கருதி நாட்டை விட்டு வெளியேறுவேன்” என்று பேசியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு தான் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்தநிலையிலும் அவர், ஜார்ஜியாவில் தேர்தல் பிரசார பேரணியில் பங்கேற்று 2 மணி நேரம் பேசியுள்ளார். அப்போது, ‘எனக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டபோது எனது எதிரிகள் மகிழ்ச்சியடைந்தனர்’ என்றும் கூறினார்.

மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பில், இந்திய-அமெரிக்கச் சமூகத்திடமிருந்து ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் பெரும் ஆதரவைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு பெருகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று அதிபர் ட்ரம்ப் தேர்தல் தோல்வி குறித்துப் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.