உலகம்

கோமா நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்? - தென் கொரிய அதிகாரி பரபரப்பு தகவல்!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதாகவும், அவரது தங்கை கிம் யோ ஜோங்கின் கட்டுப்பாட்டில் தற்போது வடகொரியா இருப்பதாகவும் தென் கொரியாவின் முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவின் முன்னாள் அதிபரான கிம் டே ஜுங்கின் நெருக்கமான அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற சங் சோங் மின் வடகொரிய அதிபர் கோமா நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். எந்த வடகொரிய அதிபரும் ஆட்சி செய்ய முடியாத வகையில் உடல்நிலை மோசமாகியிருந்தாலோ அல்லது புரட்சியின் காரணமாக ஆட்சி பீடத்திலிருந்து அகற்றப்பட்டாலோதான் இன்னொருவரிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

”கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கவேண்டும். ஆனால் அவரது வாழ்க்கை முடியவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ அதிபராக கிம் யோ ஜோங் பதவியேற்கவில்லை என்றாலும், நீண்ட நாட்களாக அதிபர் அலுவலகம் செயலற்றுக் கிடப்பதால் பணிகளை அவர் தொடங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கும் செய்தியை சீன உளவாளிகளிடமிருந்து பெற்றதாக சங் சோங் மின் தெரிவித்துள்ளார். கடைசியாக ஏப்ரல் 11-ம் தேதி வெளியுலகுக்கு கிம் ஜாங் உன் காட்சி தந்தார். அதன் பின் அவர் பல நாட்கள் வெளியில் வரவில்லை. இது போன்று பலமுறை கிம் ஜோங் உன் குறித்து வதந்திகள் பரவி பின்பு அவர் நலமாக காட்சி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பொது வெளியில் தோன்றிய கிம் ஜாங் உன்” : வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த வட கொரிய ஊடகம்!