உலகம்

“பிற நாடுகளின் உதவிகள் தேவை இல்லை” : ஊரடங்கை முழுமையாக நீக்கிய வடகொரியா - வழக்கமான பணியில் கிம் ஜாங் உன்!

உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்திவரும் வேளையிலும் வட கொரியா பற்றிய வந்திகளும், அதிபர் கிம் பற்றி கிளம்பிவிடப்படும் பொய் குற்றச்சாட்டுகளும் உலக அளவில் தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக, வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும், அவரது மரணம் குறித்த செய்தியை அந்நாட்டு அரசு மறைத்துவிட்டதாக பல்வேறு கட்டுக்கதைகளை சில குறிப்பிட்ட ஊடகங்கள் மக்கள் மத்தியில் பரப்பி வந்தன. இதனையடுத்து கிம் ஜாங் உன்னுக்கு எதுவும் ஆகவில்லை என்றும் அவர் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும் தென் கொரியா உயரதிகாரிகள் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

அதுமட்டுமல்லாது, சீனாவுக்கு அருகாமையில் உள்ள வடகொரிய நாட்டில் கொரோனா பரவாமல் இருப்பதற்காக, அதுகுறித்து அறிந்த உடனேயே, முதல் ஆளாக நாட்டின் அனைத்து போக்குவரத்துக்கான கதவுகளையும் அடைத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு எதுவும் இல்லாத நிலையில், தென்கொரியாவில் இருந்து சட்டவிரோதமாக வந்த ஒருவரால் வட கொரியாவில் கொரோனா பரவத் தொடங்கியது. சில நூறு பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையின் மூலம் தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்ததால், அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு நீக்கப்பட்டதாகவும், கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் எல்லைகள் மட்டும் மூடியே இருக்கும் என வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பிற நாடுகளின் உதவி இதில் தேவை இல்லை என்று கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அதிபர் கிம் எடுத்த நடவடிக்கைகளை அந்நாட்டு மக்கள் பாராட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிபரும் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: “பொது வெளியில் தோன்றிய கிம் ஜாங் உன்” : வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த வட கொரிய ஊடகம்!