உலகம்

சமூக இடைவெளியை கடைபிடித்து செயல்படும் சிறார் பள்ளி - சமர்த்தாக படிக்கும் குழந்தைகள்!

கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகளைத் திறக்க முடியாத சூழல் நிலவும் நிலையில், மாணவர்களின் கல்வி குறித்த கவலை பெற்றோரிடையே அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தை திறம்படச் சமாளிப்பதே அரசின் - கல்வி நிறுவனங்களின் கடமையாக உள்ளது.

தாய்லாந்தில் உள்ள ஒரு சிறார் பள்ளி கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின் மீண்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திறக்கப்பட்டுள்ளது. அங்கு பயிலும் சிறார் சமூக இடைவெளியுடனான பயிற்றுவித்தலை கடந்த ஜூலை மாதத்தில் இருந்து பின்பற்றி வருகின்றனர்.

அந்தப் பள்ளியில் விளையாடும்போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக சிறுவர் சிறுமிகளுக்கென்று கூடைகளை பிரத்யேகமாய் ஒளிபுகத்தக்க வடிவில் அமைத்து உருவாக்கி இருக்கிறார்கள். அதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

மேலும் அங்கு, பள்ளி நுழைவுவாயிலில் வெப்பமானியும், வகுப்பறைக்கு வகுப்பறை கை சுத்திகரிப்பு செய்யும் திரவங்களும், சோப்களும் வைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

அதுமட்டுமின்றி அங்குள்ள மழலைகள் சமர்த்தாக முகக்கவசம் அணிந்துகொண்டு சுகாதாரமாக இக்காலகட்டத்தில் இருக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் தினமும் சமூக இடைவெளியுடன் பாடி வருகின்றனர்.

வகுப்பறையிலும் சரி, சாப்பிடும் இடத்திலும் சரி அனைத்து இடங்களிலும் சரியான வகையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்ததன் பலனாய், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிக்குச் சென்ற ஒருவருக்கு கூட கொரோனா நோய்த் தொற்று ஏற்படவில்லை.

நம்பிக்கையோடு பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படங்கள் எல்லாம் எதிர்நோக்கியிருக்கும் காலத்தை குறித்தான கவனத்தைக் கோரி நிற்கின்றன.

Also Read: “கொரோனா கொல்கிறதோ இல்லையோ... பசியும், வறுமையும் கொன்றுவிடும்” - வீட்டு வேலை செய்வோர் வேதனை!