உலகம்

லெபனான் விபத்தால் அரசுக்கு எதிராக கிளர்ந்த மக்கள் - தவறுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தது லெபனான் அரசு!

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக கிடங்கில் இருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் கடந்த 4-ம் தேதி வெடித்துச் சிதறியது. இந்தப் பெரும் வெடி விபத்தால் 20 கிலோ மீட்டர் தூரம் வரை கடும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் உயிரிந்தோர் எண்ணிக்கை தற்போது 160 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சுமார் 3 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

உலக நாடுகளை நடுங்கச் செய்த இந்த வெடி விபத்து பெரும் துயரச் சம்பவமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, முறையான அனுமதியின்றியும், பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றியும் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டதே வெடி விபத்துக்கு காரணம் என அந்நாட்டு அரசு கூறிவந்தது.

கொரோனா ஊரடங்கு லெபனான் முழுவதும் அமலில் இருக்கும் நிலையில், அரசின் அலட்சியமே இந்த கோரச் சம்பவத்திற்கு காரணம் எனக் குற்றம்சாட்டி மக்கள் வீதிகளுக்கு வந்தனர். வீதிகளில் வந்த மக்கள் கூட்டத்தினர் அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்ததர்; அரசு ராஜினாமா செய்யவேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டம் நீடித்தது.

கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிய லெபனான் அரசு, அந்நாட்டு தலைமை அதிகாரிகள் மற்றும் அமைச்சரவையை ஒன்று கூட்டி கூட்டம் நடத்தியது. கூட்டத்திற்கு தலைமைத் தாங்கிய பிரதமர் ஹசன் டியாப், தவறுக்கு பொறுப்பேற்று மொத்தமாக பதவி விலகுவதென முடிவு செய்தார்.

இதனையடுத்து அந்நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் ஹசன் டியாப், தனது தலைமையிலான லெபனான் அரசு மொத்தமாக பதவி விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு கிடைந்த மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.

மக்கள் போராட்டங்கள் மூலம் அரசை அடிபணிய வைக்கலாம் என்பதற்கு லெபனான் மக்கள் போராட்டம் ஒரு மிகப்பெரிய சமகால உதாரணம் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: லெபனான் போராட்டத்தில் தாயையும், குழந்தையையும் நெகிழச் செய்த போராட்டக்காரர்கள்... அப்படி என்ன செய்தார்கள்?