உலகம்

ஊழியர்களை ஜூன் 2021 வரை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ள ஃபேஸ்புக் - போனஸும் அறிவிப்பு!

ஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களை ஜூலை 2021 வரை வீட்டிலிருந்தே வேலை செய்துகொள்ள அனுமதித்துள்ளது. அது மட்டுமல்லாமல் வீட்டிலேயே அலுவலகப் பணிகளுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொள்ள 1,000 டாலர்களையும் வழங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக உலக அளவில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன.

முக்கியமாக உலகின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யச் சொல்லியதும் இல்லாமல், அவர்கள் வீட்டில் அலுவலக பணிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளச் சம்பளத்தோடு அல்லாமல் போனஸ் பணத்தையும் வழங்கி வருகின்றன.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதத்தில் கூகுள் நிறுவனம் அதனுடைய பணியாளர்களை ஜூலை 2021 வரை வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று அறிவித்தது. அதேபோல் ட்விட்டர் நிறுவனமும் கால வரையற்ற அறிவிப்பை அதனுடைய சில ஊழியர்களுக்கு அறிவித்தது.

அந்தவரிசையில் ஃபேஸ்புக் நிறுவனமும் அதனுடைய ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. “சுகாதாரம் மற்றும் அரசு சார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு இணங்கவும், நம் நிறுவனத்தில் உள் வட்ட கலந்தாலோசனைக்கு பிறகும் ஜூலை 2021 வரை நம் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கின்றோம்.” என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு வீட்டில் அலுவலக பணிகளைச் செய்யத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள 1,000 அமெரிக்க டாலர்களும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது இந்திய மதிப்பில் 75,000 ரூபாயாகும்.

அதே நேரத்தில் கடந்த 2 மாதங்களாக வைரஸ் தொற்று குறைந்து வரும் பகுதிகளில் அந்நிறுவனம் அரசின் விதிகளுக்கு உட்பட்டு அலுவலகங்களைத் திறக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Also Read: ஃபேஸ்புக், யூடியூபில் உலவும் ஆபாச - அவதூறு வீடியோக்கள் : "தணிக்கை வாரியம் தேவை" : ஐகோர்ட்டில் வழக்கு!