உலகம்
“இந்த ஆண்டில் 50 மில்லியன் மக்கள் கொடிய வறுமையில் சிக்குவார்கள்” - அரசுகளுக்கு ஐ.நா மீண்டும் எச்சரிக்கை!
கொரோனா தொற்றால் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான உணவு நெருக்கடியின் விளிம்பில் உலகம் நிற்பதாகவும், பேரழிவை தவிர்க்க அரசுகள் விரைவாக செயல்பட வேண்டும் எனவும் ஐ.நா பொதுச்செயலர் அன்டோனியோ கட்டரெஸ் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஐ.நா சபை பொதுச்செயலர் அன்டோனியோ கட்டரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு சுமார் 50 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆனால் நீண்டகால விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்.
குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு வாழ்நாள் முழுவதும் துன்பத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே, உலகெங்கிலும் உள்ள ஐந்து குழந்தைகளில், ஒரு குழந்தை 5 வயதிற்குள் வளர்ச்சியில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
ஏழை மக்களுக்கு உடனடி சமூக பாதுகாப்பு அளிப்பது அவசியம். கொரோனா தொற்று பாதிப்பால் நிலவும் மந்தநிலை அவர்களுக்கு அடிப்படை ஊட்டச்சத்து கிடைக்காமல் போக வழிவகுக்கும். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வரவிருக்கும் உலகளாவிய உணவு அவசரநிலை 49, மில்லியன் மக்களுக்கு நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏராளமான உணவு உற்பத்தி செய்யப்படும் நாடுகளில் கூட, உணவு விநியோகத்தில் இடையூறு ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளின் மோசமான தாக்கங்களைத் தவிர்க்க நாம் இப்போதே செயல்பட வேண்டும்.
அரசாங்கங்கள் உணவு விநியோக சங்கிலிகளுக்கு முன்னுரிமை அளித்தல், சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் ஊரடங்கால் பள்ளிகளில் உணவு கிடைக்காத குழந்தைகள் உள்பட பல்வேறு பிரிவினருக்கும் உணவை உறுதி செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொடர்பாக ஐ.நா தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், வறுமை குறித்து பலரும் அச்சமடைந்து வருகின்றனர்.
Also Read
-
“சிவந்தது சென்னை!” - மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபராதம் செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
-
“கலைஞர் ஒரு வரலாற்றுப் பதிவு! அவரை யாராலும் முறியடிக்க முடியாது!” : தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் தமிழ்நாட்டு MP-க்கள் : முதலிடத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் MP!
-
அண்ணா பல்கலைக்கழக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.500 கோடி நிதி! : அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு!