உலகம்

“உயிரிழப்பு நிகழ்கிறது அதனால் என்ன?; நான் என்ன செய்யவேண்டும்?”: பொறுப்பற்ற வகையில் பேசிய பிரேசில் அதிபர்!

உலக அளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. உலகின் வல்லரசு நாடு முதல் பல நாடுகளை கொரோனா சின்ன பின்னமாக்கியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்த சூழலிலும் சில குறிப்பிட்ட நாடுகள் பெரிய அளவில் உயிர் பலிகளை சந்தித்தப் போதும் கூட கொரோனா விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தொற்றால் அதிக உயிர் பலிகள் நிகழும் பிரேசிலில், அந்நாட்டு அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ கொரோனா விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதாக சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸால் பிரேசில் இதுவரை, 156,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கையும் 10,656 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 10,169 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 664 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ செய்தியாளர்கள் சந்தித்தின் போது, “உயிரிழப்பு நிகழ்கிறது அதனால் என்ன? மன்னிக்கவும். ஆனால், நான் என்ன செய்ய வேண்டும் என எண்ணுகிறீர்கள்?” என பொறுப்பற்ற வகையில் பேசினார். அவரின் இந்த பேச்சு கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. அந்நாட்டு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, கொரோனா ஊரடங்கு கொண்டுவரப்பட்ட நாள் முதலே எதிர்மறையான கருத்துக்களையும், துரித நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியம் செயல்படுவதையே ஜெய்ர் பொல்சனாரோ வாடிக்கையாக வைத்துள்ளார் என அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் பிரேசில் நாட்டின் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோதான் வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராடுவதில் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அவர் தனது மனநிலையை மாற்றிக் கொள்ளவேண்டும் என பிரபல இங்கிலாந்து இதழான ‘தி லான்செட்’ கடுமையாக விமர்சனம் செய்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

Also Read: தமிழகத்தில் இன்று 526 பேருக்கு கொரோனா தொற்று... சென்னையில் மூவாயிரத்தை கடந்த பாதிப்பு! #CoronaUpdate