உலகம்

“இதுவரை நிகழாத கொடுமை - அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,176 பேர் பலி” : திணறும் வல்லரசு அதிபர்!

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்த வைரஸ், இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 191,047 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்தனர். உலகளவில் 2,725,035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 745,813 ஆக உள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் கடந்த வாரம் முதலே புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 40,000 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த , இத்தாலி, ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி தற்போது அமெரிக்கா முதல் இடத்திற்கு சென்றுள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு வல்லரசு நாட்டின் தலைவர் திணறி வருகிறார்.

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில், 3176 பேர் இறந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 886,442 -ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50,236 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 85,922 ஆக உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, நியூயார்க் மாகணத்தில் மட்டுமே 268,581 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,861 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்கா அதிகம் பயன்படுத்திவந்த ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தால் எந்த பயனும் இல்லையென்றும் அதனைப் பயன்படுத்தியதால் மரணம் அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தால் மரணம் அதிகரிக்கிறதா?” : ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!