உலகம்

அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய குழு அமைத்த ட்ரம்ப் : இந்தியர்களுக்கே முதல் இடம் !

உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1 லட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா மிகமோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள சூழலில், அந்நாட்டின் பொருளாதாரமும் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் வீழ்ந்த அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக புதிய குழு ஒன்றை அமைத்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.

'மாபெரும் அமெரிக்கப் பொருளாதார புத்தாக்க மீட்டெழுச்சி தொழிற்துறை குழு' (Great American Economic Revival Industry Groups) என அழைக்கப்படும் இந்தக் குழு அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அறிவுரைகளை அமெரிக்க அரசிற்கு வழங்க உள்ளது.

இந்தக் குழுவில் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ சத்யா நாதெல்லா, ஐ.பி.எம் நிறுவனத்தின் அரவிந்த் கிருஷ்ணா, மைக்ரான் நிறுவனத்தின் சஞ்சய் மெஹ்ரோத்ரா, மாஸ்டர் கார்டு அஜய் பங்கா, ஆன் முகர்ஜி ஆகிய ஆறு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், ஃபேஸ்புக்கின் மார்க் ஸுக்கர்பர்க் உள்ளிட்ட உலகின் பெரும் தொழில்நுட்ப புரட்சியாளர்களும் ட்ரம்ப் அமைத்துள்ள இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு குறித்த அறிவிப்பின்போது பேசிய டொனால்ட் ட்ரம்ப், "இவர்கள் புத்திசாலிகள், பிரகாசமானவர்கள், இவர்கள்தான் நமக்குப் புதிய யோசனைகளை வழங்கவுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இந்தப் புதிய குழுவானது அமெரிக்கப் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அமெரிக்க அரசுக்கு ஆலோசனை வழங்க உள்ளது.

Also Read: “மதவெறுப்பை பரப்புவோரே... இந்தியாவை தலைநிமிரவைத்த இஸ்லாமியரை தெரியுமா?” #Covid19 - Hydroxy Chloro Quine