உலகம்

Bio Warஐ உருவாக்க சதி தீட்டியதா சீன அரசு? - கொரோனா வைரஸ் பற்றி 1981ம் ஆண்டே கணித்த அமெரிக்க நாவலாசிரியர்

சீன நாட்டின் வளர்ச்சியும், உற்பத்தியும் எந்த அளவுக்கு உலக அளவில் வியப்பை ஏற்படுத்தி வருகிறதோ அதே அளவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவிய இந்த வைரஸ் தொற்றால் இதுவரையில் ஆயிரத்து 700க்கும் மேலானோர் உயிரிழந்திருக்கின்றனர். 60 ஆயிரத்துக்கும் மேலானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், இனி ஏற்படாமல் தடுப்பதற்கும் மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாததால் சீன அரசு செய்வதறியாது தவித்து வருகிறது. இதற்கிடையே, சர்வதேச மருத்துவ அவசர நிலையை அறிவித்து உலக நாடுகள் அனைத்தையும் உஷார் நிலையில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

இந்நிலையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து கடந்த வாரம் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்ட உலக சுகாதார மையம், இந்த கொரோனா வைரஸுக்கு COVID-19 என புதுப் பெயரை அறிவித்தது.

அதில், CO-Corona, VI-Virus, D-Disease என்றும் 2019ல் வைரஸ் தொற்று பரவியதால் 19 என குறிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இப்படி இருக்கையில், 1981ம் ஆண்டு வெளியான The Eyes of Darkness என்ற திகில் நாவலில் தற்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனா(கோவிட்) நோய் தொற்று குறித்து குறிப்பிடப்பட்டது.

டீன் கூன்ட்ஸ் என்பவர் எழுதிய இந்த நாவலில், போர் மூளும் போது Bio Weaponஐ பயன்படுத்துவதற்காக சீன ராணுவ ஆய்வகம் வூஹான்-400 என்ற உயிர் கொல்லியை உருவாக்கியுள்ளது. அது தவறுதலாக வெளியே பரவி மனிதர்களை மட்டுமே பாதிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது போலவே தற்போது சீனாவின் வூஹான் நகரில் ஏற்பட்டுள்ள கோவிட் (கொரோனா வைரஸ்) -19 ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியுள்ளது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் டீன் கூன்ட்ஸ் எழுதிய நாவலில் குறிப்பிட்டதை போல ஒத்துப் போவதால் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்பே கணித்து எழுதியிருப்பதாக டீன் கூன்ட்ஸை மக்கள் பாராட்டியும் வருகின்றனர்.