உலகம்
பிரிட்டன் தேர்தல் : மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார் போரிஸ் ஜான்சன்!
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்தது. இதற்கு பொது வாக்கெடுப்பில் ஆதரவு கிடைத்தபோதிலும், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக டேவிட் கேமரூன் மற்றும் தெரசா மே ஆகிய பிரதமர்கள் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து பிரதமராக பதவியேற்ற போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிரெக்சிட் மசோதா தோல்வியடைந்தது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை ஐரோப்பிய யூனியன் ஜனவரி 31 வரை நீட்டித்துள்ளது. இதுவே இங்கிலாந்துக்கு வழங்கப்பட்ட கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது.
இந்த மசோதாவை நிறைவேற்றும் நோக்கில், நாடாளுமன்றத்துக்கு புதிதாக தேர்தல் நடத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்தார். அதன்படி, 650 உறுப்பினர்களைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 10 மணி வரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியும், ஜெரேமி கார்பைன் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும்போட்டி நிலவியது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி 354 இடங்களை கைப்பற்றியுள்ளது.
தொழிலாளர் கட்சி 202 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. பெரும்பான்மையை விட அதிக தொகுதிகளில் வென்றுள்ள கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது.
தேர்தல் வெற்றிக் குறித்து பேசிய போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற முடிவில் மக்கள் உறுதியாக உள்ளதை தேர்தல் முடிவு காட்டுவதாக தெரிவித்தார். மீண்டும் பிரதமராகியிருக்கும் போரிஸ் ஜான்சனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்தின் எதிர்க்கட்சி தலைவரான ஜெரோமி கோர்பன் தொழிலாளர் கட்சியின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட பின்னடைவை அடுத்து, ராஜினாமா செய்திருப்பதாக தெரிகிறது.
Also Read
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!
-
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !
-
ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கே.ஜி.எஃப் விக்கி கைது : போலிஸ் அதிரடி!
-
3 ஆண்டுகள் - 6115 புத்தொழில் நிறுவனங்கள் : திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனை!