உலகம்

தன் குழந்தை இறந்ததால், தாய்ப்பாலை 63 நாட்களுக்கு தானமாக வழங்கிய பெண் : நெகிழ்ச்சி சம்பவம்!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் சயிரா ஸ்ட்ராங்பீல்ட். இவருக்கு சமீபத்தில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் மருத்துவர்கள் குறித்த காலத்தில் இருந்து 63 நாட்களுக்கு முன்னதாகவே குறைப் பிரசவமாக பிறந்த குழந்தை 3 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது.

இதனால் மிகுந்த வேதனையுடன் இருந்த சயிராவிற்கு தாய்ப்பால் சுரந்துள்ளது. அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த சயிரா தனது தாய்ப்பாலை தாய் இல்லாமல் பிறக்கும் குழந்தைக்கு தானமாக கொடுக்க முடிவு எடுத்துள்ளார்.

அதன்படி குழந்தை பிறந்தநாளில் இருந்து குழந்தை பிறக்கும் என அறிவிக்கப்பட்ட 63 நாட்கள் வரை சுரந்த பாலை சேகரித்து பதப்படுத்து தானமாக வழங்கியுள்ளார். இதுதொடர்பாக சயிரா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், “என்னுடைய குழந்தை சாமுவேலை என்னால் காப்பாற்ற முடிவில்லை. ஆனால் தாய்ப்பால் இல்லாமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு இது உதவியாக இருக்கும் என்பதாலேயே இந்த முடிவை எடுத்தேன்.

அதுமட்டுமின்றி, என் குழந்தையே இல்லாதபோது எனக்கு பால் சுரப்பது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு எடுத்த முடிவு தான் இந்த தாய்ப்பால் தானம். இதன் மூலம் என் குழந்தை இன்னும் பூமியில் இருப்பதாக நினைத்துக்கொள்கிறேன். என்னுடைய இந்தச் செயலால் என மகன் நிச்சயம் பெருமை கொள்வான்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், “என்னால் முடிந்தவரை 63 நாட்களுக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளேன். என் குழந்தைக்கான பாலை என்.ஐ.சி.யூ பால் வங்கியில் தானமாக வழங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.