உலகம்

உலகின் நம்பர் 1 பணக்காரர் எனும் பெருமையை இழந்த அமேசான் நிறுவனர்... இப்போது ‘டாப்’ யார் தெரியுமா?

உலகின் நம்பர் 1 செல்வந்தர் என்ற மிகப்பெரும் பெருமையை இழந்தார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்.

இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றில் மிகப்பெரிய அளவில் ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறது அமேசான் நிறுவனம். உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளத்தையும், கிளவுட் சேவை தளத்தையும் வைத்திருக்கும் அமேசான் நிறுவனத்தின் தலைவர் தான் ஜெப் பெசோஸ்.

2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், அமேசான் பங்குகளின் மதிப்பு பங்குச் சந்தையில் உயர்ந்தபோது, ஒரு குறுகிய காலத்திற்கு பில்கேட்ஸை கடந்து சென்று, முதலிடத்தில் இருந்தார். பிறகு பங்குகளின் மதிப்பு வீழ்ந்தபோது இரண்டாம் இடத்திற்கு வந்தார்.

கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அமேசான் பங்குகளின் மதிப்பு திடீரென கூடியபோது, மீண்டும் பில்கேட்ஸை முந்தி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு வந்தார் ஜெப் செசோஸ்.

தற்போது, மூன்றாம் காலாண்டில் அமேசான் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்ததால், முதலிடத்தை இழந்து இரண்டாம் இடத்திற்கு கீழிறங்கியுள்ளார் ஜெப் பெசோஸ். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரராக இருந்தாலும், பில்கேட்ஸ், மார்க் ஸுக்கர்பெர்க் ஆகியோரைப் போல ஜெப் பெசோஸ், தன்னார்வ தொண்டுகள் செய்வதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை எனக் குற்றம்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.