உலகம்

சந்தேகத்தின் பேரில் கண்டெய்னரை சோதனையிட்ட போலிஸ்; சடலமாக கிடந்த 39 பேர் - லண்டனில் நடந்த பயங்கரம்!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிரேஸ் பகுதியில் தொழிற்பூங்காவின் அருகில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் ஒன்றை போலிஸார் கைப்பற்றினர்.

பின்னர் அந்த கண்டெய்னரை இங்கிலாந்தின் எஸ்செக்ஸ் பகுதி போலிஸார் சோதனை செய்தபோது, அந்த கண்டெய்னருக்குள் ஒரு சிறுவன் உள்பட 39 பேரின் சடலங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அந்த கண்டெய்னர், பல்கேரியாவில் இருந்து வந்தது என்பதும், ஹோலிஹெட் பகுதி வழியாக கடந்த 19ம் தேதி பிரிட்டனுக்குள் நுழைந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சந்தேகத்தின் பேரில் வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 25 வயது டிரைவர் ஒருவரை போலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்த கொலைகளை டிரைவர் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை போலிஸார் துவக்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்றுவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் இங்கிலாந்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், இறந்தவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதற்கான பணிகளை உள்துறையின் மூலம் செய்துவருவதாகவும், இறந்தவர்களின் குடும்பங்கள் குறித்துக் கவலைப்படுவதாவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அந்த கண்டெய்னர் பல்கேரியாவில் இருந்து வந்தது என்று இங்கிலாந்து போலிஸார் தெரிவிப்பது அடிப்படை ஆதாரமற்றது என பல்கேரியா வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் முழுமையான விசாரணைக்கு பிறகு கொலை குறித்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.