உலகம்

தலைமறைவாகி 17 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்த கைதி : ட்ரோன் மூலம் கண்டுபிடித்த போலிஸார் !

சீனாவின் யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சாங் ஜியாங். அவருக்கு தற்போது வயது 63. இவர் கடந்த 2002ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படார். அப்போது பாதுகாப்பு போலிஸாரை ஏமாற்றி அங்கிருந்து சாங் ஜியாங் தப்பித்து ஓடிவிட்டார்.

பின்னர், சாங் ஜியாங்கைத் தேடிய போலிஸார் அவர் எங்கு தலைமறைவானார் எனத் தெரியாமல் திகைத்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் யோங்க்ஷன் பகுதி போலிஸார் சாங் ஜியாங் குறித்த தகவலை தெரிவித்தனர். யோங்க்ஷன் பகுதி போலிஸார் கொடுத்த தகவலின் படி, சாங் ஜியாங்கின் வீட்டிற்கு அருகிலுள்ள மலைகளில் போலிஸார் தேடுதல் முயற்சியில் இறங்கினார்கள்.

மலைகளில் தேடி எந்த பயனும் கிடைக்காதால், ட்ரோன் மூலம் சாங் ஜியாங்கைத் தேட முடிவு எடுத்தனர். அதன்படி உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று துல்லிய கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன்களை மலைப்பகுதியில் பறக்கவிட்டனர். அப்போது ஒரு ட்ரோன் காட்சி மூலம் நீல நிறத்தில் ஒரு சிறிய கூரை ஒன்று இருப்பதனை கண்டறிந்தனர்.

மேலும் மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களும் சில ட்ரோன் கேமராவில் சிக்கன. பின்னர் மலைச் சரிவில் அந்த கூரை இருப்பதனை உறுதி செய்த போலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அந்த கூரையின் அடியில் ஒரு சிறிய குகை இருப்பதனையும் கண்டுபிடித்தனர். அங்கு தலைமறைவாக இருந்த சாங் ஜியாங்கையும் போலிஸார் கைது செய்தனர். மலைகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வாழ்ந்து வந்ததாகவும், இப்பகுதிக்குள் யாரும் வரமுடியாது எனத் தெரிந்தே அங்கு தலைமறைவானதாகவும் அவர் போலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் சாங் ஜியாங். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த இருப்பதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.