உலகம்

“கருஞ்சட்டைத் தோழர்களின் ஒத்துழைப்பிற்குக் கிடைத்த விருது” : ஆசிரியர் கி.வீரமணி நெகிழ்ச்சி!

அமெரிக்காவில் 75 ஆண்டுகளாக மனிதநேயத்திற்குக் குரல் கொடுத்துவரும் அறிவியல் மனப்பான்மை கொண்ட - பொதுநல நோக்குடைய அமைப்பு அமெரிக்க மனிதநேயர் சங்கம் (American Humanist Association).

இந்த அமைப்பும், அமெரிக்காவில் இயங்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பும் இணைந்து நடத்தும் மாநாட்டில், அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1953ம் ஆண்டு முதல், உலகளாவிய அளவில் மனிதநேய சிந்தனையுடன் பொதுநலனில் ஈடுபட்டு வருவோருக்கு வழங்கப்பட்டு வரும் இந்த விருது முதன்முதலாக இந்தியர் ஒருவருக்கு, அதிலும் திராவிடர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

விருதினைப் பெற்றுக்கொண்ட ஆசிரியர் கி.வீரமணி தமது ஏற்புரையில், “விருது தனிப்பட்ட முறையில் வழங்கப்படவில்லை; பெரியாரின் தொண்டன் என்பதால்தான் வழங்கப் பட்டுள்ளது. பெரியார்தாம் விருதுக்கு உரியவர். இத்தகைய விருது மேலும் பணியாற்றுவதற்கு - இயக்கத்தின் தூண்களாக விளங்கிடும் கருப்புச் சட்டைத் தோழர்களின் ஒத்துழைப்பிற்குக் கிடைத்த விருது'' எனக் குறிப்பிட்டு மிகவும் நெகிழ்ச்சிகரமாகப் பேசினார். மேலும், உலகளாவிய அளவில் “சுயமரியாதை மனித நேயம்” பற்றிய நீண்டதொரு ஆழமான உரையினை வழங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற கருத்துக்களம்’ நிகழ்வை ஊடகவியலாளர் ப.திருமாவேலன் முகவுரையாற்றித் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, மருத்துவர் சரோஜா இளங்கோவன், அகத்தியன் பெனடிக்ட், பெனிசில்வேனியா பன்னீர்செல்வம் இராஜமாணிக்கம், சிகாகோ செல்வி அகிலா செல்வராஜ், எம்.வி.கனிமொழி, துரைக்கண்ணன் சுந்தரக்கண்ணன், சிகாகோ சரவணக்குமார், வேல்முருகன் பெரியசாமி, மேரிலாந்து மணிக்குமார் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளின் கீழ் கருத்துகளை வழங்கினார்கள்.

ஊடகவியலாளரும், கலைஞர் செய்திகள் தலைமை ஆசிரியருமான ப.திருமாவேலன், ‘தமிழ்த் தேசியமும், பெரியாரும்' எனும் தலைப்பில் உரையாற்றினார். திராவிடம் என்பதில் தமிழ்த் தேசியமும் அடங்கும் என்று ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன், ‘மனிதநேயமும் சமூகநீதியும்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.