உலகம்

16 நாட்களாகத் தீ பிடித்து எரியும் ’உலகின் நுரையீரல்’ : அழிவை நோக்கிய ஆபத்தில் நமது பூமி ? - பகீர் தகவல் !

புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த அமேசான் மழைக் காடுகள் பெரும் பங்கினை வகிக்கிறது. அந்த காடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மட்டும் அதிகமுறை காட்டு தீ உருவாகியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது இயற்கை நமக்குக் கொடுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கக்கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் தரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, “இந்தாண்டு அமேசான் மழைக்காடுகளில் 72 ஆயிரத்து 843 முறை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இது கடந்தாண்டில் ஏற்பட்ட காட்டுத்தீயை விட 83 சதவீதம் அதிகம் என எண்ணப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை மட்டும் சுமார் 9 ஆயிரத்து 507 முறை புதிய காட்டுத்தீ உருவாகியிருப்பதாக விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்தி விடுத்துள்ளது.

மேலும் இதுகுறித்து ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “உலகின் மிகப்பெரிய அமேசான் மழைக்காடு, பூமியின் ஆக்ஸிஜனில் 20 சதவீதத்தை உருவாக்குகிறது.

அடிப்படையில் உலகின் நுரையீரல் அமேசான் மழைக்காடு ஆகும். அந்தக் காடு கடந்த 16 நாட்களாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன. இந்த உண்மையை சிந்திக்கவே பயமாக இருக்கிறது. ஏன் இதை எந்த ஊடகமும் பேச மறுக்கிறது ? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக்காட்டு தீ குறித்து சூழலியாளர்களும், சமூக செயற்பாட்டளர்கள் என பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பிரேசிலில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை தலைவரை அண்மையில் அந்நாட்டு அதிபர் ஜெய்ர் பொல்சொனாரோ பணிநீக்கம் செய்தார்.

மேலும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ, பொருளாதாரத்தில் உயர்த்துவதற்காக பிரேசில் மழைக்காடுகள் அழிக்கப்படுவதனைக் கண்டுக்கொள்ளாமல் ஆட்சி செய்து வருகிறார் என்று பூர்வ பழங்குடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.