உலகம்

நினைவுப் பரிசாக இத்தாலி கடற்கரை மணலை பத்திரப்படுத்திய சுற்றுலா பயணிகள்: 2.60 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு

இத்தாலியின் சார்தீனியா கடற்கரைக்கு வந்ததன் நினைவாக அங்கு இருந்த மணலை எடுத்துச் சென்றதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியின் சிசிலி மற்றும் சார்தீனியா ஆகிய கடற்கரைகளை சுற்றுலா பயணிகள் சுகாதாரமாக வைத்துக்கொள்வதில்லை என்றும், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கடற்கரைகளில் இருந்து கூழாங்கற்கள், கிளிஞ்சல்கள் மற்றும் மணலை எடுத்துச் செல்ல கடந்த 2017ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா பயணிகள் சார்தீனியா கடற்கரைக்கு சென்றவர்கள் அங்கிருந்து திரும்பும் போது, அந்த பகுதியின் நினைவாக இருக்கட்டும் என நினைத்து 14 பாட்டில்களில் மணலை நிரப்பி எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

இதனை அறிந்து போலிஸார் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். போர்டோ டோரசில் இருந்து பிரான்ஸுக்கு படகு மூலம் செல்ல முற்படும் போது இருவரும் பிடிபட்டனர். 40 கிலோ எடையுள்ள மணலை எடுத்துச் சென்றது குறித்து அவர்களிடம் இத்தாலி போலிஸார் விசாரணை நடத்தியதில், நினைவு பரிசாகவே மணலை எடுத்துச் செல்ல முயற்சித்தோம். தடை விதிப்பு குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.

பிடிபட்ட மணல்

இருப்பினும், சட்டவிரோதமாக மணலை எடுத்த காரணத்தினால் அவர்களுக்கு ஓராண்டு முதல் 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இருவருக்கும் இந்திய மதிப்பில் 2,60,248 ரூபாய் ($3,300) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.