உலகம்

காஷ்மீர் சூழலை என் நண்பர்கள் மோடியும், இம்ரான் கானும் இணைந்து சரி செய்வார்கள் - ட்ரம்ப் ட்வீட் !

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து எழுந்து வருகிறது.

இதற்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘எனது நல்ல நண்பர்களான இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகிய இருவரிடமும் பேசினேன். வர்த்தகம், கூட்டாண்மை குறித்தும், முக்கியமாக காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழலை குறைக்க இந்தியா-பாகிஸ்தான் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசினேன். சூழலோ கடுமையானதுதான். ஆனால், நல்ல முறையில் உரையாடல் நிகழ்ந்து முடிந்தது’ என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டர் செய்தி குறித்து, நியூயார்க்கைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் ரவி பத்ரா கூறுகையில், ‘அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க மக்களுக்காகவும், நம் துணை கண்டத்தில் வசிக்கும் நண்பர்களாக திகழும் மக்களுக்காகவும் இரு நாட்டு பிரதமர்களிடமும் பேசினார்.

பயங்கரவாதம் அற்ற, சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு உட்பட்டு குடிமக்களுடன் இணைந்து நல்ல வருங்காலத்தை உருவாக்க வேண்டும் எனும் எண்ணத்துடனே பேசினார். பேச்சு சுதந்திரமாக இருக்கும்போது, ஒருவரின் வெறுப்பு கலந்த பேச்சானது உள்நாட்டு அமைதியை கலைப்பதாகவும், கிளர்ச்சியை ஏற்படுத்துவதுமாக இருக்கிறது. பேச்சு அவ்விதத்தில் இருக்கக் கூடாது.

பிரதமர் மோடி, காஷ்மீரில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இது அழைப்பிற்கான நேரம்’ என கூறியுள்ளார்.

இதற்கிடையே, தொலைபேசி உரையாடல் 30 நிமிடங்கள் நடந்ததாகவும், அப்போது பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் நடந்துக் கொள்கிறார் என அதிபர் டிரம்பிடம் குற்றம் சாட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.