உலகம்

இலங்கையில் பதற்றம் அதிகரிப்பு : வன்முறையில் ஒருவர் படுகொலை!

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக இரு மதத்தினரிடையே அவ்வப்போது மோதல் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இலங்கையில் கடற்ரை நகரமான சிலாவில் மே 13ம் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், மசூதி, கடைகள் தாக்கப்பட்டன. இச்சம்பவத்தையடுத்து சிலாவ் நகரில் இன்று காலை வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற ஒருசில சமூக வலைதளங்களை இலங்கை அரசு முடக்கியது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

அதனையடுத்து மே 14ம் தேதி இரவில் பல இடங்களில் இஸ்லாமியர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவர்களின் வீடு, கடைகள் மற்றும் மசூதிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. வன்முறை கும்பல் கம்பு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் கேபினட் அமைச்சருமான ராப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவையும் மீறி இத்தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன. சில இடங்களில் பாதுகாப்பு படையினரே இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இஸ்லாமிய மக்களின் வீடு, கடைகளை சூறையாடியது, தீ வைத்தது தொடர்பாக வன்முறையில் ஈடுபட்ட சுமார் 25 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.