Viral

Flipkart-ல் ஆர்டர் செய்த நபர்... OTP சொல்ல தாமதமணத்தால் ஆத்திரமடைந்த டெலிவரி பாய்... பிறகு நடந்தது என்ன ?

அன்றாட வாழ்க்கையில் அனைத்தும் இணையமயமாகி விட்ட காரணத்தினால், சில தேவைகளும் நமக்கு இணையம் மூலமே கிடைக்கிறது. அதில் முக்கியமாக விளங்குவது ஆன்லைன் ஷாப்பிங். இதன் மூலம் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே நமக்கு பிடித்தவற்றை ஆர்டர் செய்து நம்மால் பெற இயலும். இவ்வாறு ஆன்லைன் ஷாப்பிங்கில் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனம் மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடியவையாக இருக்கிறது.

உலகம் முழுவதும் இருக்கும் பயனர்கள் இந்தியாவிலும் ஏராளம். ஆனால் அண்மைக்காலமாக ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதில் வேறு பொருட்கள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. லேப்டாப் ஆர்டர் செய்தார் பர்கர் என்றும், போன் ஆர்டர் செய்தால் பௌடர் டப்பா என்றும் வருகிறது. அதோடு இதனை டெலிவெரி செய்யும் ஊழியர்களும் அவ்வப்போது மரியாதை குறைவுடன் வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்வதாகவும் புகார்கள் எழுந்த வண்ணமாகவே உள்ளது.

இவ்வாறு எழப்படும் புகாரின் அடிப்படையில் அந்நிறுவனம் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளிக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் நடந்துள்ளது. வயதான ஒருவர் பொருள் ஒன்றை ஆர்டர் செய்த நிலையில், OTP என்று சொல்லப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் எண்ணை கூற திணறியுள்ளார். இதனால் பொறுமை இழந்த டெலிவரி ஊழியர் அவரை அவமரியாதையுடன் நடத்தியிருக்கிறார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவரின் மகள் இணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அதாவது ஈஸ்வரி என்ற இணையவாசி ஒருவர் கடந்த 21-ம் தேதி தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனது அப்பா Flipkart-ல் ஒன்றை ஆர்டர் செய்தார். அவரால் அவரது ஃபோனில் Otpஐக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் டெலிவரி செய்பவர் அவர் மீது கோபமடைந்து “எதுவுமே தெரியாத போது, ஏன் ஆர்டர் செய்கிறீர்கள்?” என்றார். அவர்களிடமிருந்து மீண்டும் எதையும் ஆர்டர் செய்ய வேண்டாம்." என்று கோபமாக பதிவிட்டிருந்தார்.

இவரது இந்த பதிவுக்கு பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்ததோடு, Flipkart நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இவரது பதிவுக்கு Flipkart நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் இதுபோல் இனி நடக்காது எனவும் உறுதியளித்துள்ளது. இந்த நிகழ்வுக்கு தற்போது இணையவாசிகள் பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.