Viral

டியூஷன் போக பிடிக்கல.. குஜராத் போலிஸாரை அலையவிட்ட 10 வயது சிறுமி : நடந்தது என்ன?

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் போபட்ரா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி வழக்கம்போல் சம்பவத்தன்று மாலை பெற்றோரிடம் டியூஷனுக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் அவர் டியூஷன் முடிந்தும் வீட்டிற்குத் திரும்பவில்லை.

இதனால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடிவந்தனர். பின்னர் சில மணி நேரம் கழித்து சிறுமி வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் தனது பெற்றோர்களிடம், தன்னை நம்பர் பிளேட் இல்லாத கருப்பு ஜீப்பில் வந்த மூன்று பேர் கடத்தி சென்றதாகவும், அவர்களை தாக்கிவிட்டு தப்பித்து வந்தாகவும்கூறியுள்ளார்.

மேலும் நான் மட்டும் கடத்தப்படவில்லை. அந்த வேனில் மற்றொரு பெண்ணும் இருந்தார் என கூறியுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பிறகு உடனே போலிஸார் சிறுமி கூறிய வழியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது சிறுமி கூறியதுபோல் எந்த வாகனமும் அந்த வழியாகச் செல்லவில்லை. மேலும் சிறுமி மட்டுமே தனியாக நடந்து செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதனால் சிறுமியைத் தனியாக அழைத்து போலிஸார் விசாரித்த போதுதான் நடந்த உண்மையை வெளியே கூறியுள்ளார்.

டியூஷன் ஆசிரியர் சிறுமிக்கு வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார். இதை முடிக்காததால் ஆசிரியர் தன்னை திட்டுவார் என்பதால் சிறுமி கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை போலிஸார் எச்சரிக்கை செய்து அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

Also Read: கூகுள் நிறுவனத்திற்கு ரூ.7000 கோடி அபராதம்.. நீதிபதி தொடர்ந்த வழக்கு : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!