Viral

சாலையில் உயிரிழந்த மகன்.. சடலத்தை தள்ளுவண்டியில் இழுத்து சென்ற தாய் : இறுதி சடங்குக்கு உதவிய போலிஸ் !

உத்தர பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் ராஜூ என்ற நபர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். எட்டாவா என்ற பகுதியில் இருந்து மிரட்டுக்கு வேலை தேடி குடும்பத்தினர் குடிபெயர்ந்தனர். இந்த சமயத்தில் குடி போதைக்கு அடிமையான ராஜூ கடந்த செவ்வாய்கிழமை டாஸ்மாக் அருகே உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து ராஜூவின் பெற்றோருக்கு தகவல் கிடைக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் ராஜூவின் உடலை கண்டு கதறி அழுத்தனர். பின்னர் அவரது உடலை கொண்டு செல்ல அங்கிருந்தவர்களிடம் பண உதவி கேட்டனர். ஆனால் அங்கிருந்த ஒருத்தரும் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை. இதையடுத்து அருகில் இருந்த தள்ளுவண்டி ஒன்றை எடுத்து ராஜூவின் உடலை அதில் ஏற்றி அவரை கொண்டு சென்றனர்.

செல்லும் வழியில் கூட இவரது இறுதி சடங்குக்கு பணம் கேட்டு மன்றாடினர். அப்போது கூட இவர்களுக்கு யாரும் எந்த உதவியும் செய்யவில்லை. இதையடுத்து வேறு வழியின்றி தாயும், தம்பியும் ராஜூவின் சடலத்துடன் தள்ளுவண்டியை அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று உதவி கேட்டனர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அமித்குமார் மாலிக் இவர்களிடம் விவரத்தை கேட்டறிந்தார்.

அப்போது தங்களிடம் தற்போது கைவசம் ஒரு ரூபாய் கூட இல்லை என்று கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். இதையடுத்து தானும் நிதி உதவி செய்ததோடு அருகில் இருந்த மற்றவர்களிடம் இருந்தும் நிதி திரட்டி உயிரிழந்த ராஜூவுக்கு இறுதி சடங்கு செய்ய உதவி செய்தார். இதையடுத்து அவரது உடல் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.

இந்த சூழலில் இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் உத்தரவிட்டதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பூட்டிய வீட்டுக்குள் பல மாதங்களாக அடைந்து கிடந்த தாய், சிறுவன், நாய்கள்.. புதுவையில் அதிர்ச்சி !