Viral

29 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய தம்பதி.. காரணம் என்ன?

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் சூக்கூர். இவருக்கு 1994ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷீனா என்ற பெண்ணுடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கதீஜா ஜாஸ்மின், பாத்திமா ஜெபின், பாத்திமா ஜேசா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

இந்த தம்பதி இஸ்லாமிய மதத்தின் படி தனிநபர் ஷிரியத் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆண் வாரிசு இல்லாததால் அவர்களது சொத்தில் ஒரு பகுதி மட்டுமே மூன்று மகள்களுக்குச் செல்லும். மற்ற சொத்துக்கள் சூக்கூரின் சகோதரருக்கு செல்லும்.

இதனை விரும்பாத சூக்கர் தம்பதி சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று மகளிர் தினத்தில் மூன்று மகள்கள் முன்னிலையில் ஹோஸ்துர்க் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தால் தனது மூன்று மகள்களுக்குச் சொத்து முழுமையாகக் கிடைக்க உள்ளது.

இது குறித்து கூறும் தம்பதி, "நாங்கள் விளம்பரத்திற்காக மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆண் பிள்ளை இல்லாததால் எங்களது மகள்களுக்காக மறுதிருமணம் செய்து கொண்டோம்" என தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்த திருமணத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

Also Read: 'இளையநிலா பொழிகிறதே'.. பாடலுக்கு கிடார் இசைத்த பிரபல கலைஞர் மரணம்.. இளையராஜா உள்ளிட்ட பலர் இரங்கல்!