Viral
துருக்கி நிலநடுக்கம் : இடிபாடுகளுக்கு நடுவில் பிறந்த அதிசய ஆண் குழந்தை.. வீடியோ வைரல் !
மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் இடத்தில் துருக்கி நாடு அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்த பகுதியில் அந்நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை 4.17 மணிக்கு காசியானதெப் எனும் இடத்தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் நொடியில் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். அதிகாலை நேரம் என்பதால் ஏராளமானோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டனர்.
பூமிக்கு அடியில் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா நாட்டிலும் பல்வேறு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் லெபனான், ஸைப்ரஸ், இஸ்ரேல் உள்பட்ட நாடுகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் 7.5 என்ற ரிக்டர் அளவில் இரண்டாவது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் 6 என்ற ரிக்டர் அளவில் 3 -வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தவிர ரிக்டரில் 4 என்ற அளவில் 30 முறை அந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக சிதிலமடைந்த கட்டிடங்கள் கூட தொடர்ந்து இடிந்துவருவதால் அங்கு பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் சுமார் 6 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிக்கலில் இருக்கும் துருக்கி - சிரியாவுக்கு பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அதன்படி பிலிப்பைன்ஸ் தனது நாட்டிலுள்ள மீட்பு படையினை அனுப்பி வைத்துள்ளது.
அதே நேரத்தில் சீனா முதல் தவணையாக 6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.49.6 கோடி) அவசர நிதியாக வழங்கியுள்ளது. தொடர்ந்து நிவாரண பொருள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் உள்ளிட்டவை இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து பலவேறு நாடுகளும் உதவி வருகின்றனர்.
தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் துருக்கியில் உள்ள ஒரு இடத்தில் இடிபாடுகளில் சிக்கிய நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர், குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அனுதாபத்தை பெற்று வருகிறது.
அதாவது துருக்கியை சேர்ந்த பெண் ஒருவர் நிலநடுக்கத்தின்போது மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. அப்போது அதில் சிக்கிய பெண் ஒருவர் தனது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மேலும் அந்த பெண் இறந்ததாக கூறப்படுகிறது. எனினும் அந்த குழந்தை தற்போது நலமுடன் இருக்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!