Viral

பீகார் vs ம.பி : திருமண நிகழ்விற்கு சாப்பிட அழையா விருந்தாளியா வந்த இளைஞரை வரவேற்ற மணமகன்.. Video வைரல் !

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் ஜபல்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் அழையா விருந்தாளியாக MBA படிக்கும் மாணவர் ஒருவர் வந்துள்ளார். மேலும் அவர் அங்கிருந்த சாப்பாட்டை சாப்பிட்டுள்ளார். இதனை கண்ட திருமண வீட்டார்கள், அவரை பிடித்து வசைபாடியுள்ளனர்.

மேலும் இலவசமாக சாப்பிட்டதற்கு தண்டனை கொடுக்கும் விதமாக, அங்கிருக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்யும்படி கூறியுள்ளனர். இளைஞரும் சோக முகத்துடன் வந்து சுத்தம் செய்துள்ளார். அது மட்டுமின்றி இதனை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இது வைரலாகி பலரும் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது, பீகாரில் இதே போல் சாப்பிடுவதற்காக அழையா விருந்தாளியாக வந்த கல்லூரி மாணவரை மணமகனே வரவேற்றுள்ளார். அதாவது பீகாரில் உள்ள பாகல்பூரில் கல்லூரி ஒன்றில் அலோக் யாதவ் என்ற மாணவர் படித்து வருகிறார்.

இவர் சம்பவத்தன்று அங்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கே சாப்பிட்டு விட்டு பின்னர், மணமகனை மேடைக்கு சென்று வாழ்த்தினார் இது தொடர்பாக வெளியான வீடியோவில், "நான் அருகில் உள்ள விடுதியில் தங்கியிருக்கிறேன். எனக்கு பசியாக இருந்தது. அங்கே உணவு எதுவும் இல்லை. அழையா விருந்தாளியாக இங்கு வந்து வயிறார சாப்பிட்டுவிட்டேன். உங்களுக்கு ஏதேனும் பிரச்னையா?. உங்களது திருமணத்துக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மணமகன் அதுல் ராஜக், "எனக்கு எதுவும் பிரச்னை இல்லை. உங்கள் விடுதிக்கும் கொஞ்சம் உணவை எடுத்துச் செல்லுங்கள்" என்று கூறியுள்ளார். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த அந்த மாணவர், உணவை விடுதிக்கு கொஞ்சம் எடுத்துச் செல்லுமாறு அவர் கூறுகையில் தன்னை கண்கலங்க வைப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

மணமகனின் பாசமான உபசரிப்பால் மனம் நெகிழ்ந்த அந்த கல்லூரி மாணவர் பின்னர் சென்றார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், சூர்யவம்சம் பட பாணியில் "பசியோடு அழையா விருந்தாளியாக வந்த இளைஞரை பாத்திரம் கழுவ வைத்த மத்திய பிரதேசம் எங்க.. பரவாயில்ல வேண்டும் என்றால் ஹாஸ்டலுக்கும் கொஞ்சம் சாப்பாடு கொண்டு போங்க னு சொன்ன பீகார் மணமகன் எங்க.." என்ற தோணியில் கிண்டலடித்து வருகின்றனர்.

Also Read: நகரத்தை சூழ்ந்த எலிகள்.. “எலி பிடிக்க ஆட்கள் தேவை..” : சம்பளம் 1 கோடி.. எங்கு தெரியுமா ?