Viral

FIFA உலகக் கோப்பையில் ஒலித்த முதலமைச்சரின் 'திராவிட மாடல்' குரல்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கத்தாரில் FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்கி லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் கத்தாரை நோக்கியே இருக்கிறது.

லீக் போட்டியில் அர்ஜென்டினா, ஜெர்மனி, பிரேசில், போர்ச்சுக்கள், பிரான்ஸ் போன்ற நட்சத்திர அணிகள் ஒரு போட்டியில் தோற்றுள்ளது அந்தந்த நாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடரில் கத்துக்குட்டி அணிகளுடன் ஜாம்பவான் அணிகள் லீக் போட்டியிலேயே தோற்றுள்ளதால் நாக் அவுட் சுற்றுகள் நட்சத்திர அணிகளுக்கே சவாலாக இருக்கப்போகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகக் கோப்பை போட்டியைக் காண உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ரசிகர்கள் கத்தாரில் குவிந்து உள்ளனர். இவர்கள் தங்கள் நாட்டின் பெருமையைப் போட்டி நடக்கும் மைதானத்தில் உடைகள், பாதாகைகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் கேரளாவில் இருந்து தாய் ஒருவர் காரில் தனியாகவே கால்பந்து போட்டியை காண கத்தாருக்குச் சென்றுள்ளார். அதேபோல் 2 நண்பர்கள் சைக்கிள் மூலம் கத்தாருக்கு வந்துள்ளனர். இப்படி கால்பந்து காதலர்கள் பல வழியில் கத்தாரில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தினமும் கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து போட்டிகளைப் பார்த்து ரசித்து வருகிறார். இந்த கொண்டாட்டத்திற்கு இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி உச்சரித்து வரும் 'திராவிட மாடல்' என்ற வார்த்தையை அந்த இளைஞர் உலகத்திற்கே அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும் உணவு மற்றும் விவசாயத்தின் பெருமையையும் எடுத்து கூறியுள்ளார்.

அந்த இளைஞர் திருநெல்வேலி மாவட்டம் மூலைகரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது. இவர் தினமும் கால்பந்து போட்டியைப் பார்த்து வருகிறார். அப்போது தனது கையில் ஒரு பதாகையை ஏந்தி உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்து வருகிறார்.

அந்த பதாகையில், "உழவன் இலையேல் உணவு இல்லை. உழவன் காப்போம், உயிர் நேயம் பேணுவோம்.Proud Tto Be a Farmer Son. மூலைக்கரைப்பட்டி state of திராவிட மாடல்" என எழுதப்பட்டுள்ளது. தற்போது இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்!