Viral

“திரும்ப வந்துட்டோம்” : யூடியூப் முடக்கத்திலிருந்து மீண்டு வந்த Irfan's view - காரணம் குறித்து விளக்கம்!

இர்ஃபானின் சேனல் யூடியூப் முடக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளது.

யூடியூப் தளத்தில் உணவுப் பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இர்ஃபான். உணவு விமர்சகரான இர்ஃபான் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு, அதன் சுவை குறித்த விமர்சனத்தை வீடியோவாகப் பதிவிடுவார். இவரது யூட்யூப் பக்கத்திற்கு 3 மில்லியனுக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் உள்ள சிறிய உணவுக்கடைகள் முதல் பெரிய உணவகங்கள் வரை சென்று ஃபுட் ரிவியூ வீடியோக்களை வெளியிட்டு வந்தார் இர்ஃபான்.

இந்நிலையில், யூடியூப் விதிமுறைகளை மீறியதாக இர்ஃபானின் பக்கம் யூடியூப் நிறுவனத்தால் நேற்று முடக்கப்பட்டது. இந்தச் செய்தி அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இர்ஃபான், “யூடியூப் நமது சேனலை டெர்மினேட் செய்தது ஏன் எனத் தெரியவில்லை. இந்தப் பிரச்சனையை முடிந்தவரை சரிசெய்ய முயல்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இர்ஃபானின் சேனல் முடக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளது. இர்ஃபானின் முறையீட்டை அடுத்து, யூடியூப் நிறுவனம் முடக்கத்தை ரத்து செய்து சேனலை விடுவித்துள்ளது.

இதன்மூலம், இந்த சேனல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாகப் பேசி ஒரு வீடியோவை தனது சேனலில் வெளியிட்டுள்ளார் இர்ஃபான். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.