Viral

“மாஸ்க் வாங்க பணம் இல்ல.. எனக்கு வேற வழி தெரியல” - அரசு அலுவலகத்திற்கு பறவைக்கூட்டோடு வந்த முதியவர்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. பல மாநிலங்களில் கொரோனா அதிக பாதிப்பையும், அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது காட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் முகக் கவசம் வாங்க பணம் இல்லாத ஆடு மேய்க்கும் முதியவர் ஒருவர், அரசு அலுவலகத்திற்கு பென்சன் தொகை வாங்கச் சென்றபோது, பறவைக்கூட்டை மாஸ்க்காக அணிந்து சென்றுள்ளார்.

தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள சின்னமுனுகல்சாட் நகரைச் சேர்ந்த முதியவரான மேகலா குர்மய்யாதான் இப்படி பறவைக்கூட்டை மாஸ்க்காக அணிந்து சென்றுள்ளார். அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

மாஸ்க் வாங்க போதிய பணம் இல்லாத நிலையில், பென்சன் தொகையை பெற அரசு அலுவலகத்திற்கு சென்றாக வேண்டிய நிலை ஏற்பட்டதால், நெசவாளரான தானே பறவைக்கூட்டை உருவாக்கி அதனை மூக்கு வாயை மறைக்குமாறு அணிந்து சென்றுள்ளார்.

முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிப்பதோடு, முகக் கவசம் வாங்க வசதியற்றவர்களுக்கு அரசே இலவசமாக மாஸ்க் வழங்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: “நான் வாழ்ந்துவிட்டேன்; என் படுக்கையை இளைஞருக்கு கொடுங்கள்”- நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முதியவர் உயிரிழப்பு!