Viral

இளைஞனின் உயிரை காவு வாங்கிய ஃபேஸ்புக் ஹெல்த் டிப்ஸ்: இலங்கையில் ஒரு பரிதாபம்! 

சமூக வலைதளங்கள் எந்த அளவுக்கு நன்மைகளை கொடுக்கும் வழித்தடமாக இருக்கிறதோ அதனைவிட பன்மடங்கு அதிகமாக வதந்திகளை பரப்பை பயன்படுகிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் வரும் ஃபார்வேர்டு குறுஞ்செய்திகளை பார்த்து பயந்தும், ஆச்சர்யமடைந்தும், அதில் குறிப்பிட்டிருப்பதை போலவே நடப்பதால் பல சமயங்களில் இன்னல்களே விளைவாக வந்தடைகிறது.

அந்த வகையில், இலங்கையின் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர், உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் இந்த ஜூஸை குடித்தால் போதும் என ஃபேஸ்புக்கில் வந்த வீடியோவை பார்த்து ஈர்க்கப்பட்டிருக்கிறார்.

அதனையடுத்து, அந்த வீடியோவில் கூறப்பட்டதை போல கஜ மாடரா என்ற மரத்தின் இலைகளை பறித்து அதனை பழச்சாறாக போட்டு குடித்திருக்கிறார். அந்த ஜூஸை குடித்த சில நிமிடங்களிலேயே மயங்கி கீழே விழுந்திருக்கிறார்.

பின்னர் அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது பரிசோதித்ததில் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து பிரேத பரிசோதனை நடத்திய போது அவர் குடித்த பழச்சாற்றில் விஷம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வகை மரங்கள் இலங்கையில் மிகவும் அறிதாகவே இருக்கும் என்றும், இந்த கஜ மாடரா மரத்தை பாம்பு, பூச்சிகள் கூட அண்டாது என்றும் தெரிவிக்கின்றனர்.

ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வரும் அனைத்து தரவுகளும் போலியானதா இல்லையா என்பதை அறிந்த பிறகே அவற்றை உபயோகிக்கவோ மற்றொருவருக்கு பகிரவோ வேண்டும் என அவ்வப்போது வலியுறுத்தப்பட்டு வந்தாலும் அதனை யாரும் காதில் ஏற்றிக்கொள்வதில்லை என்பதற்கு இலங்கையைச் சேர்ந்த அந்த நபரின் உயிரிழப்பு ஒரு சாட்சியாக உள்ளது