Viral
பெண்ணாக வேடமிட்டு வீட்டு வேலை செய்யும் நபர் : மதுரையில் ஒரு ‘அவ்வை சண்முகி’ !
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு தலைதூக்கியுள்ளது. இளைஞர்கள் படித்த வேலைக்குச் செல்ல முடியாமல் கிடைத்த வேலைக்கு சென்றாலும், நிரந்தரமான ஊதியத்தை ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொள்ளை, திருட்டு போன்ற குற்றச்சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க, மதுரையில் 40 வயதுடைய நபர் ஒருவர் தினந்தோறும் பெண் வேடமிட்டு வீட்டு வேலைக்குச் சென்று வருவது தெரியவந்துள்ளது.
தினந்தோறும் மதுரை தெப்பக்குளம் பகுதிக்கு அருகே ஒரு மறைவான இடத்திற்கு வந்து தன்னிடம் உள்ள சேலை, ஜாக்கெட்டை அணிந்து தலையில் விக் வைத்துக்கொண்டு பெண் போல் மாறி தன்னுடைய வேலைக்கு செல்கிறார் இந்த நபர்.
இதனை பல நாள் கண்காணித்து வந்த அப்பகுதி மக்கள் அண்மையில் அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, பெண்ணாக வேடமிட்டு வீட்டு வேலைக்குச் செல்பவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ராஜா எனத் தெரியவந்தது.
பெண் வேடமிட்டு வேலைக்கு வருவது ஏன் என்று கேட்டதற்கு, வயதான பெற்றோரை காப்பாற்றுவதற்காகவே இதுபோன்று நடிக்க வேண்டியதாயிற்று என்றும், மானாமதுரையிலேயே இந்த வேலை செய்தால் ஏளனமாக கருதுவார்கள் என்பதாலேயே மதுரைக்கு தினசரி வந்து இவ்வாறு மாறிக்கொள்கிறேன் என ராஜா கூறியுள்ளார்.
மேலும், “நான் வேலை செய்யும் இடங்களில் இது வரை எந்த குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. என் மீது சந்தேகம் வரும்படி நான் நடந்துகொண்டதும் இல்லை. பணிபுரியும் வீடுகளில் எனது பெயரை ராஜாத்தி என்றே கூறியுள்ளேன். ஒருவேளை என்னுடைய சுயரூபம் தெரிந்து அவர்கள் என்னை மன்னித்து மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ராஜா பெண்ணாக வேடமிட்டு சேலை அணியும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலர் அவ்வை சண்முகி படத்தில் கமல் தன்னுடைய மனைவி மீனா வீட்டிற்கு பெண் வேடமிட்டு வேலைக்குச் செல்லும் காட்சியை நினைவுகூர்ந்துள்ளனர்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!