Viral

“எங்கள் வலையில் சிக்கிய ராக்கெட் எங்களுக்குத் தான் சொந்தம்” - புதுச்சேரியில் மீனவர்கள் நூதன போராட்டம்!

புதுச்சேரி கடலுக்குள் நேற்று மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் மர்மப் பொருள் ஒன்று சிக்கியது. சிக்கியது பெரிய சுறா மீனாக இருக்கும் என்று நினைத்த சம்பந்தப்பட்ட படகில் சென்ற மீனவர்கள், அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்களின் துணையுடன் அந்த மர்மப் பொருளை கரைக்கு இழுத்து வந்தனர்.

கரையில் வந்து பார்த்ததும், வலையில் சிக்கியது ராக்கெட்டின் உதிரி பாகம் எனத் தெரியவந்தது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தகவல் தரப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விஞ்ஞானிகள் புதுச்சேரி விரைந்தனர்.

இன்று காலை கடற்கரைக்கு வந்த விஞ்ஞானிகள், 13.5 மீட்டர் நீளமும், 1.6 டன் எடையும் கொண்ட அந்த ராக்கெட் உதிரிபாகத்தை பார்வையிட்டனர். பின்னர் ராட்சத கிரேன் வரவழைத்து ராக்கெட்டை எடுத்துச் செல்வதற்கு ஆயத்தமாயினர்.

அப்போது அங்கு திரண்ட மீனவர்கள், ராக்கெட்டை கடலில் இருந்து இழுத்து வந்ததால் வலைகளுக்கு சேதம் ஏற்பட்டது என்றும், இதற்காக நூற்றுக்கணக்கான மீனவர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு ராக்கெட்டை எடுத்துவரும் பணியில் ஈடுபட்டார்கள் என்பதாலும் நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் தரவேண்டும் என்று கோரினர்.

ஆனால், இது மத்திய அரசுக்கு சொந்தமானது. நிவாரணம் எல்லாம் தர இயலாது என்று வாதிட்ட விஞ்ஞானிகள், போலிஸாரை துணைக்கு அழைத்தனர். இதனிடையே நிவாரணம் கொடுத்தால் ராக்கெட்டை எடுத்துச் செல்லலாம். இல்லையென்றால் ராக்கெட் எங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறி மீனவர்கள் ராக்கெட் உதிரிபாகத்தைச் சுற்றி அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

போலிஸார் சமாதானப்படுத்தியும் மீனவர்கள் அந்த இடத்தை விட்டு நகராததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராக்கெட்டை எப்படி எடுத்துச் செல்வதென்று தெரியாமல் விஞ்ஞானிகள் விழிபிதுங்கி உள்ளனர்.

Also Read: விபத்தில் சிக்குபவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5000 சன்மானம்- புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு