Viral

மருத்துவமனையில் சிகிச்சை பெறும்நிலையிலும் கோப்புகளில் கையெழுத்திடும் புதுச்சேரி முதல்வர்- #Viral Photo

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சற்று வித்தியாசமானவர். கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் நடத்திய போது, இரவு பகல் பாராமல் கவர்னர் மாளிகை எதிரில் அமர்ந்திருந்தார். அப்போது, போராட்டக்களத்திலேயே அதிகாரிகளை சந்தித்து மக்கள் நலன் குறித்த பிரச்னைகளை தீர்த்து வந்தார். அதே நேரத்தில் முக்கியமான கோப்புகளை பார்வையிட்டு கையெழுத்துப் போட்டு வந்தார். இதன்காரணமாக முதல்வர் நாராயணசாமி ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதுஇப்படி இருக்க, மூட்டு வலி காரணமாக முதல்வர் நாராயணசாமி நேற்று முன்தினம் சென்னையில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு மூட்டுப்பகுதியில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர், மருத்துவமனையில் படுக்கையில் படுத்துக் கொண்டே அரசாங்க கோப்புகளை பார்வையிட்டு, கையெழுத்திட்டு வருகிறார்.

மேலும், முக்கிய விவகாரங்களில் அதிகாரிகளை செல்போனில் தொடர்புகொண்டு பேசி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இதைப்போன்றே, தமது அமைச்சரவை சகாக்களையும் தொடர்பு கொண்டும் பேசி வருகிறார். இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தினை பலர் வரவேற்று, முதல்வர் நாராயணசாமி நலம்பெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.