Viral

அதிவேகமாக வந்த அமைச்சரின் கார் மோதி இளைஞர்கள் படுகாயம் : வழக்குப் பதியாமல் ‘தாராளம்’ காட்டிய போலிஸ்!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள அமைச்சர்கள் பலர் நாங்குநேரியைச் சூழ்ந்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தொகுதியில் முகாமிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் இருந்து மூன்றடைப்பு அருகே சென்றபோது நான்குவழிச்சாலையில் ஒரு திருப்பத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் கார் திடீரென திரும்பியது. இதனால் நாங்குநேரியில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த அப்பாச்சி பைக் ஒன்று அமைச்சரின் காரின் பின்பகுதியில் பலமாக மோதியது.

இந்த விபத்தில், பைக்கில் வந்த இளைஞர்கள் சாலையில் வீசப்பட்டனர். பின்னர் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் திருமலாபுரத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர் ஜென்னீஸ் மற்றும் பிரபாகரன் என்று தெரியவந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போக்குவரத்து போலிஸார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதிவேகமாக வந்த அமைச்சரின் காரினால் தான் மாணவர்களுக்கு விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.