Viral

திவாலானது அனில் அம்பானியின் ‘GCX’ நிறுவனம் - முதலீட்டாளர்களை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா? உண்மை என்ன?

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. அவருடைய ரிலையன்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மோடி அரசு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதனால் முகேஷ் அம்பானி அனைத்து தொழில்களிலும் லாபத்தை சம்பாதித்து இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

ஆனால் அவரது சகோதரர் அனில் அம்பானியின் தலைமையின் கீழ் இருக்கும் தொழில்கள் அனைத்தும் சமீபகாலமாக நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவால் அடையும் நிலைக்கு சென்றதால், அந்நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலத்தில் எடுக்கப்போவதாக செய்திகள் வெளியானது.

மேலும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனமும் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், தற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கிளை அமைப்பாக செயல்படும் ஜி.சி.எக்ஸ் - GCX நிறுவனம் திவாலாகியுள்ளது.

ஜி.சி.எக்ஸ் நிறுவனம் கடலுக்கு அடியில் கேபிள் சேவைகள் அளித்து வந்தது. உலகிலேயே இந்தத் துறையில் ஈடுபட்ட மிகப்பெரிய தனியார் நிறுவனம் ஜி.சி.எக்ஸ். ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்தின் சரிவே ஜி.சி.எக்ஸ் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த பாதிப்பால் 350 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் 7 சதவீதம் முதிர்வு அடைந்துவிட்டது. அதாவது ஒப்பந்தம் முடிந்துவிட்டதாலும் இதற்கு மேல் ஒப்பந்ததைத் தொடர்முடியாததாலும், ஜி.சி.எக்ஸ் நிறுவனம் தவித்துள்ளது.

அதனால் ஜி.சி.எக்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் திவாலானதாக அறிவித்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரும்பும் இடமெல்லாம் தொடர்ந்து தோல்வி, முதலீட்டாளர்கள் நெருக்கடி என மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகிறார் அனில் அம்பானி. இந்த பாதிப்பு அனில் அம்பானிக்கு மட்டும் இல்லை, இவரை நம்பி பல லட்சம் கோடிகளை முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கும் தான் என பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: 30,000 கோடி ரூபாய் நஷ்டம் : Rcom இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகிய அனில் அம்பானி - சிக்கலில் ரிலையன்ஸ்?