Viral

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்த ரயில்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண் : நெஞ்சை உலுக்கும் வீடியோ!

கர்நாடகாவில் ஒரு பெண், ரயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்று, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயில் நிலைய நடைமேடையிலிருந்து இறங்கிய பெண் ஒருவர், தண்டவாளத்தை கடக்க முயல்கிறார்.

அப்போது ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வரவே, அங்கிருந்த பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, ரயில் வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, அப்படியே ரயிலுக்கு அடியில் உடலை குறுக்கிக்கொண்டு படுத்து விடுகிறார்.

பின்னர் ரயில் முழுவதுமாகக் கடந்து சென்றதும், எவ்வித காயங்களும் இன்றி அந்தப் பெண் வெளியே வந்துள்ளார். மரணத்தின் விளிம்புக்குச் சென்று அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார் அந்தப் பெண்.

ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் படுத்து நூலிழையில் பெண் உயிர்தப்பிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. திடுக்கிட வைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.