Viral

மகன் பிறந்தநாளுக்கு 2400 கோடி ரூபாய் விமானங்களைப் பரிசளித்த தொழிலதிபர் - வைரல் ஆன வதந்தி !

சவுதி அரேபியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது மகனின் பிறந்தநாளுக்காக இரண்டு ஏர்பஸ் ஏ350 விமானங்களை வாங்கியதாகக் கூறி Thin AirToday என்கிற இணையதளத்தில் வந்த ஒரு கட்டுரை வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த செய்தியை உண்மை எனக்கருதி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக ThinAir Today இணையதளம் வெளியிட்ட செய்தியில், ''சவூதி அரேபியாவை சேர்ந்த எரிசக்தித் துறையில் முதலீட்டாளரான ஒரு தொழிலதிபர், விமானங்களின் மீது ஈடுபாடு கொண்ட தனது மகனுக்கு பிறந்தநாள் பரிசு ஒன்று வழங்குவதற்காக இணையதளத்தில் தேடியுள்ளார்.

விமான பொம்மை ஒன்றை வாங்குவதற்காக ஏர்பஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்ட அந்த தொழிலதிபருக்கு, அவர்கள் பேசிய ஆங்கிலம் புரியாததால் விமானம் குறித்து அவர்கள் கேட்ட கேள்விக்கு சமாளிப்பாக சில பதில்களைச் சொல்லி விமானத்தை ஆர்டர் செய்துள்ளார்.

சில மாதங்களுக்குப் பிறகு, விமான நிறுவனத்திடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில், விமானங்கள் விநியோகத்திற்குத் தயாராக இருப்பதாக அவரிடம் ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நபர் பேசுகையில், "இதில் யார் இதில் பறக்க போகிறார்கள் என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நகைச்சுவைக்காக அவர்கள் அவ்வாறு கேட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், அவர்கள் உண்மை விமானத்தைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள் என்று எனக்குப் பின்னர்தான் தெரிந்தது'' என்று சொல்லி இருக்கிறார்.

மேலும்,"அவர்கள் விமானத்தின் உள்புறம் மற்றும் வெளிப்புறம் பற்றி பல கேள்விகளைக் கேட்டார்கள், அவர்கள் மிகவும் துல்லியமான மாதிரிகளை உருவாக்குவார்கள் என்று நான் நினைத்தேன். கட்டணமாக 329 மில்லியன் யூரோ (இந்திய ரூபாயில் 2400 கோடி ரூபாய்) கூறினர். இந்த விலை சற்று அதிகம், ஆனால் நியாயமானது என்று நான் நினைத்தேன்” என அவர் கூறியுள்ளதாக அந்த வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி கடந்த இரு தினங்களாக சர்வதேச ஊடகங்களில் இடம் பிடித்தது. இது செய்தியின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்த போது, இது போலி செய்தி என்றும், ThinAirToday வலைதளம் விளையாட்டுக்காகப் போலி செய்திகளை உருவாக்கும் நிறுவனம் என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும் பலர் இந்த செய்தியை உண்மை என்று நம்பி பகிர்ந்துள்ளனர்.