Viral

ஜெட்லி இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் அதிர்ச்சி சம்பவம் : பா.ஜ.க எம்.பி உட்பட 11 பேரிடம் செல்போன் திருட்டு

மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த ஆகஸ்ட் 24-ம்தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரின் இறுதி அஞ்சலிக்கு பின்பு ஞாயிற்றுக்கிழமையன்று ஜெட்லியின் உடல் ஊர்வலமாக தில்லியில் உள்ள நிகாம்போத் காட் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது, பா.ஜ.க தலைவர்கள், மற்றும் பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில்தான், ஜெட்லி இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசியல் கட்சி தலைவர்கள் 11 பேரின் செல்போன் திருடு போய்விட்டது என தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பதஞ்சலி நிறுவன செய்தி தொடர்பாளர் எஸ்.கே. திஜரவாலா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் மட்டுமில்லாது மேலும் 4 பேர் காஷ்மியர் கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திஜரவாலா, தனது செல்போன் திருடுபோனது குறித்த பதிவில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் டேக் செய்துள்ளார். இதுவரை மொத்தம் 5 பேர் புகார் அளித்துள்ளனர். ஒரு முக்கிய அரசியல் கட்சி தலைவர் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் இது போல மொபைல் போன் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.