Viral

போலி கால்சென்டர் மூலம் மோசடி : மருத்துவ காப்பீடு வழங்குவதாக கூறி 300 பேரை ஏமாற்றிய இரண்டு பெண்கள் கைது !

மேற்கு டெல்லியின் விகாஸ்பூரி பகுதியைச் சேர்ந்த சுமன்லதா மற்றும் ஜோதி. இவர்கள் இரண்டு பேரையும் டெல்லி சைபர் பிரிவு போலிஸார் மோசடி வழக்கில் கைது செய்துள்ளார்கள். கைது செய்தவர்களிடம் விசாரணையில் ஈடுபடும் போது போலிஸாருக்கு பல அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

இந்த மோசடி சம்பவம் குறித்து டி.சி.பி தேவேந்தர் ஆர்யா கூறுகையில், “சுமன்லதா முன்னதாக சுகாதார சேவை பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்குதான் ஜோதியை சந்தித்துள்ளார். இந்த சமயத்தில் ஒழுங்கு நடவடிக்கைக் காரணமாக லதாவை அங்கிருந்து பணி நீக்கம் செய்துள்ளார்கள்.

பின்னர் இந்த இரண்டு பெண்களும் சேர்ந்து போலி இணையதள பக்கத்தை உருவாக்கி, நடுத்தர மக்களிடம் குறைந்த விலையில் மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவற்றின் மூலம் பணம் பறிக்க முடிவு செய்துள்ளனர். முன்பு வேலை பார்த்த கால் சென்டரில் இருந்து வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பர்களை 5 பைசாவில் இருந்து 50 பைசா வரை காசு கொடுத்து வாங்கியுள்ளனர்.

அந்த நம்பர்களின் மூலம் அவர்களின் சொத்து விவரம், குடும்பம் பின்புலம் போன்றவற்றைத் தகவல்களைத் தெரிந்துக் கொண்டு அவர்களிடம் செல்போன் மூலம் பேசி காப்பீடு வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்தி மற்றும் ஆங்கில மொழியில் வாடிக்கையாளர்களிடம் சரளமாக பேசுவதற்கு டெலி காலர் பெண்களையும் வேலையில் அமர்த்தியுள்ளனர்.

மேலும் வாடிக்கையாளர்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில், www.rakshahealthcare.com என்ற பெயரில் ஒரு வலைத்தளத்தையும் வடிவமைத்துள்ளனர். பின்னர் www.paramountmax.com, www.apollohealths.com போன்ற பெயரிலும் வலைதளங்களை நடத்தி வந்துள்ளனர்.

இவர்கள் ஷிபு சக்ரவர்த்தி என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாடிக்கையாளராக சேர்த்துள்ளனர். பின்பு சக்ரவர்த்தியிடம் இருந்து டயாலிசிஸ் சிகிச்சைக்கான காப்பீடு என்கிற பெயரில் 25 ஆயிரம் ரூபாய் வசூலித்துள்ளார்கள்.

மேலும் இதற்கான பில் தொகை ஒருவாரத்திற்குள் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் ஒருவாரம் ஆன பிறகும் எந்த அழைப்பும் தகவல்களும் வராததையொட்டி சந்தேகம் அடைந்து செல்போனில் தொடர்புக் கொண்டுள்ளார்.

அவர்களின் செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், அதிர்ந்து போய் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரில் அடிப்படையிலேயே தற்போது விசாரணை நடத்தி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 350க்கும் மேற்பட்டவர்களை இதுபோல காப்பீடு வழங்குவதாகக் கூறி மோசடி செய்துள்ளார்கள்.

இவர்களிடம் பணத்தைப் பறிக்கொடுத்தவர்கள் பற்றி விசாரித்து வருவதாகவும், மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம் இருந்து 6 கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” எனக் கூறினார்.