Viral

“நான் யார் தெரியுமா?” - மது போதையில் விபத்து ஏற்படுத்தி போலிஸை மிரட்டிய பா.ஜ.க எம்.பி-யின் மகன் கைது!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பா.ஜ.க மாநிலங்களவை எம்.பி. ரூபா கங்குலி. இவரது மகன் ஆகாஷ் முகர்ஜி. வியாழனன்று இரவு கொல்கத்தா கோல்ப் கிரீன் பகுதியில் இவர் தனது சொகுசுக் காரில், மதுபோதையில் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது மது மயக்கத்தில் காரை கோல்ப் கிளப்பின் சுவரின் மீது மோதினார். இடித்த வேகத்தில் சுவர் இடிந்து விழுந்தது. அதில் ஆகாஷுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் ஆகாஷ் முகர்ஜி குடித்திருப்பதை உறுதி செய்தனர். அதுமட்டுமின்றி மிகுந்த வேகத்தில் சக, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக வாகனத்தை ஓட்டி வந்ததாக நேரில் பார்த்தவர்களும் புகார் அளித்தனர். இதனையடுத்து ஆகாஷை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக போலிசாரிடம் சிக்கிய ஆகாஷ் முகர்ஜி, நான் எம்.பி-யின் மகன் என்னை விடுவிக்குமாறு மிரட்டும் தோனியில் போலிசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “சாலையில் ஒரு வழித்தடத்தில் அவர் வாகனத்தை இயக்கவில்லை. வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வந்து சுவரில் மோதினார். நல்லவேலை அந்த நேரத்தில் நடைபாதையில் யாரும் இல்லை. இது போல வரம்பு மீறல் செயல்களை, அதிகாரத்தில் இருப்பவர்களும் அவர்களது குடும்பத்தினருமே செய்கின்றனர். இதை அரசு தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என தெரிவிக்கின்றனர்.