Viral

பேருந்தில் பயணிக்கும்போதே தூங்கியபடி உயிரிழந்த முதியவர் - நெல்லையில் சோகம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் 61 வயது முதியவர் மூக்காண்டி. இவர் முக்கூடலில் உள்ள அவரின் மகளை பார்த்துவிட்டு, மூக்கூடலில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்ப அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்து விக்கிரமசிங்கிபுரம் சென்றுள்ளது. ஆனால் மூக்காண்டி பேருந்தில் இருந்து இறங்கவில்லை. அங்கிருந்து பேருந்து பாபநாசம் சென்று மீண்டும் விக்கிரமசிங்கிபுரம் வந்தது. பஸ்ஸில் இருந்த பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கியும் மூக்காண்டி இறங்காமல் தூங்கியபடி இருந்துள்ளார்.

இதனை கவனித்த பேருந்து நடத்துனர் அவரை எழுப்பியுள்ளார். அவரிடமிருந்து எந்த அசைவும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுனர், பேருந்தை பாபநாசம் பனிமனையின் ஓரமாக நிறுத்திவிட்டு, 108 ஆம்புலன்சுக்கு அழைத்துள்ளார்.

மூக்காண்டி

அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பேருந்தில் பயணிக்கும்போதே மூக்காண்டி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மூக்காண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பேருந்தில் பயணிக்கும் போது முதியவர் மூக்காண்டி உயிரிழந்தது விக்கிரமசிங்கிபுரம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.