Viral

மதுரையில் மது போதையில் சாக்கடையில் விழுந்து கிடந்த இளைஞர் : முகம் சுழித்த மக்கள்.. வைரலாகும் வீடியோ

நவீன காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வயதுவித்தியாசமின்றி மது பழக்கத்திற்கு பெரும்பாலானோர் அடிமையாகிவருகின்றனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சமூகத்தில் மரியாதை இழந்து நிற்கும் அவலங்களோடு கணக்கில்லாத குற்றச்செயல்களும் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது. இதிலும் குறிப்பாக மதுபோதைக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற உச்சகட்ட அவலத்திற்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதற்கு சான்றாக மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகேயுள்ள சீமான் நகர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை ஒன்றில் 25 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் மதுபோதையின் உச்சத்தில் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் சொகுசாக தூங்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

போதையில் தடுமாறி உள்ளே விழுந்த இளைஞர் தான் எங்கே இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் சாக்கடை நீரில் தவறி விழுந்தார். ஆனால், எழுந்து வர முடியாததால் அப்படியே சாக்கடையில் மிதந்தபடி தூங்குகிறார். அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் இதனை வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.

இதனையடுத்து இளைஞர்கள் சிலர் அந்த போதை இளைஞரை தூக்கி போதையை தெளியவைத்து அனுப்பிவைத்தனர். இளைஞர் மதுபோதையில் பாதாள சாக்கடையில் ஸ்டைலாக உறங்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.