Viral

மக்களை மகிழ்வித்த நகைச்சுவைக் கலைஞன் மேடையிலேயே உயிரை விட்ட சோகம் - வருத்தத்தில் ரசிகர்கள் (வீடியோ)

மேடை நகைச்சுவைக் கலைஞர் மஞ்சுநாத் மேடை நிகழ்ச்சி ஒன்றில் நடித்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சார்ந்த மஞ்சுநாத், மேடை நகைச்சுவை செய்வதில் மிகவும் பிரபலமானவர். துபாயில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மஞ்சுநாத் நடித்துக் கொண்டிருந்த போது, பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதியில் சரிந்து விழுந்துள்ளார். இது அவர் நடிப்பின் ஒரு பகுதி என்று பலர் நினைத்து தொடர்ந்து ஆரவாரம் செய்துள்ளனர். பின்னர் வெகுநேரமாகியும் அவர் எழவில்லை என்பதால் அவரை சோதித்த பின்னர், அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பேசிய அவரது நண்பரும் சக மேடை கலைஞருமான மிக்தாத் தோஹத்வாலா கூறுகையில், “அவர் மேடையில் சென்று தனது கதைகளால் மக்களை சிரிக்க வைத்தார். அவர் தனது தந்தை மற்றும் குடும்பத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் எப்படி பதட்டத்தால் பாதிக்கப்படுகிறார் என்ற கதையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தன் வாழ்நாள் முழுவதையும் மக்களை சிரிக்க வைப்பதற்காக உழைத்த கலைஞன், இன்று மேடையிலேயே நிகழ்ச்சி நடக்கும்போதே உயிரிழந்து இருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.