Viral

‘பட்..இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு’ : கம்பெனியை காப்பாற்ற ரிலையன்ஸ் அம்பானி சகோதரர்கள் ரகசிய டீலிங் 

இந்தியாவின் மிக முக்கிய பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி உள்ளார். இவருடைய ரிலையன்ஸ் கார்ப்ரேட் நிறுவனத்திற்கு மோடி அரசு அனைத்து சலுகைகளையும் வாரி வழங்கி வருகிறது. இதனால் முகேஷ் அம்பானி அனைத்து தொழில்களிலும் லாபத்தை சம்பாத்தித்து வருகிறார்.

ஆனால் அவரின் சகோதரர் அனில் அம்பானி மேற்கொள்ளும் தொழில்கள் அனைத்தும் சமீபகாலமாக நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவால் அடையும் நிலைக்கு சென்றுள்ளது.

அதனால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ஏலத்திற்கு விட அனில் அம்பானி முடிவு எடுத்துள்ளார். அம்பானி சகோதரர்களின் அப்பாவான திருபாய் ஆரம்பித்த ரிலையன்ஸ் நிறுவனத்தின், குடும்ப சொத்தாக இருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனை முகேஷ் அம்பானியே கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ஏலத்தில் எடுப்பதன் மூலம், முகேஷ் அம்பானிக்கு இரண்டு வித லாபம் அடைந்துவிடுவதாக பொருளாதார ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் செல்போன் டவர்கள் அனைத்தும், 5ஜி தொழில்நுட்பத்தில் அடியெடுத்து வைக்கும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மிக உபயோகமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

திருபாய் அம்பானியால் 90-களில் கையகப்படுத்தப்பட்ட ஐ.சி.ஐ பாலியெஸ்டர் நிறுவனம், வணிக நோக்கங்களுக்காக வாங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். அவரின் மறைவுக்கு பிறகு சகோதரர்கள் இருவரும் எதிர் எதிர் திசையில் பயணித்தனர்.

இந்த ஐ.சி.ஐ பாலியெஸ்டர் நிறுவனத்தின் மூலம் ரிலையன்ஸ் குழுமம் முன்னேற்றம் அடைந்தது. அதேநேரத்தில் தவறான முடிவுகளை எடுததன் விளைவாக, அனில் அம்பானியின் Rcom நிறுவனத்திற்கு கிட்டதட்ட 46,000 கோடி ரூபாய் கடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக ஏற்பட்ட சிக்கலில் அனில் அம்பானியின் கடன் தொகையை செலுத்தி முகேஷ் அம்பானி அவர் சிறைத் தண்டனைப் பெறுவதை தடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எரிக்சன் என்கிற தொலைத்தொடர்பு நிறுவனத்துடன், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் போடப்பட்ட ஒப்பந்தம் முறிந்ததற்கு, அனில் அம்பானியின் நிர்வாக திறன் குறைபாடே காரணம் என கூறப்பட்டது. அது தொடர்பாக வழக்கில் எரிக்சன் நிறுவனத்திற்கு அனில் அம்பானி 5.5 பில்லியன் வழங்கவேண்டும் என உத்தரவிட்டு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் அந்த தொகையை காலக்கெடு முடிவதற்கு முன்பு, ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் கொடுக்க முடியவில்லை. அப்போது அந்த தொகையை செலுத்தி முகேஷ் அம்பானி, தனது தம்பி அனில் அம்பானியைக் காப்பாற்றி இருந்தார்.

ஏற்கனவே Rcom நிறுவனத்தை பயன்படுத்தி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், முன்னரே மும்பை உள்ளிட்ட 21 வட்டங்களில் அந்த நிறுவனத்தின் கருவிகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 18,000 கோடி மதிப்புள்ள 43,000 தொலைத் தொடர்பு கோபுரங்கள் மற்றும் இந்த நிறுவனத்தின் பிற வயர்லெஸ் கட்டமைப்புகளை வாங்க ஒப்புக் கொண்டது.

பல ஆண்டுகளாக இரு சகோதரர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வந்தாலும், குடும்ப சொத்துகள் தங்களை மீறி வேறு யாருக்கும் சென்றுவிடக்கூடாது என்பதில் அண்ணன் - தம்பி இருவரும் தெளிவாக இருக்கிறார்கள் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய மதிப்பின்படி, அண்ணன் முகேஷ் அம்பானியின் சொத்து 5,210 கோடி அமெரிக்க டாலர்களாகவும், தம்பி அனில் அம்பானியின் சொத்து மதிப்பு வெறும் 140 கோடி அமெரிக்க டாலர்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.