Viral

தங்களிடம் இருந்து பிடுங்கிய 400 ஏக்கர் நிலத்தை சாமியார் கம்பெனிக்கு கொடுத்த பா.ஜ.க - விவசாயிகள் அதிர்ச்சி

பா.ஜ.க ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களும், சாமியார் பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனமும் கொள்ளை லாபம் அடைந்து வருகின்றன. கார்ப்பரேட்களுக்கு சலுகைகள் அள்ளிக் குவிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் செல்வாக்கப் பயன்படுத்தி பாபா ராம்தேவுக்கு பா.ஜ.க ஆட்சியில் கூடுதலாக சலுகைகள் வழங்கப்படுகின்றன. சலுகை என்ற பெயரில் விவசாய நிலங்கள் மற்றும் அரசு பொதுச் சொத்துகளையும் மொத்தமாக வளைத்துப்போடும் வேளையில் ‘பதஞ்சலி’ நிறுவனம் இறங்கியுள்ளது.

தொடர்ச்சியாக ராம்தேவின் பதஞ்சலி யோகா பீடம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களை வளைத்து போட்டுள்ளது. குறிப்பாக 2016ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் மீகானில் உள்ள 347 ஏக்கர் நிலத்தை உணவுப் பதப்படுத்தும் நிறுவனம் அமைக்கப் போவதாக அரசிடம் இருந்து வாங்கியது. அதனை அடுத்து கடோல் என்ற இடத்தில் சுமார் 200 ஏக்கர் நிலத்தை ஆரஞ்சு பதப்படுத்துதல் தொழிற்சாலை அமைக்கப்போவதாக வளைத்துப் போட்டது.

இந்நிலையில் மேலும் 400 ஏக்கர் நிலத்ததை கையகப்படுத்தியள்ளது. மகாராஷ்டிர மாநிலம் லாட்டூர் மாவட்டத்தித்திற்கு உட்பட்ட ஆஷா என்ற கிராமத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை சந்தை மதிப்பை விட மிகக் குறைவான விலைக்கு ராம் தேவின் நிறுவனம் வாங்கியுள்ளது.

முன்னதாக இந்த நிலம் ‘பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)’ நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக் கனரக தொழிற்துறை அமைச்சராக இருந்தார். அப்போது இந்த நிலம் ‘BHEL’ நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதன் பின்பு திட்டம் எதுவும் செயல்படுத்தப்படாத நிலையில், இந்த நிலத்தை நடுத்தர வளர்ச்சி அடையும் நிறுவனத்திற்கு வாங்குவதாக முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அந்த முடிவை மதிக்காத பா.ஜ.க அரசு, மின் கட்டண சலுகை, ஜி.எஸ்.டி மற்றும் பத்திரப்பதிவில் சலுகை என்ற ஏராளமான சலுகைகளை கொடுத்தும் மேலும் 50 சதவீதம் குறைத்து 400 ஏக்கர் நிலத்தை பதஞ்சலிக்கு வாரி வழங்கியுள்ளது.

மேலும் கடும் வறட்சியினால் நிலத்தை வழங்கிய விவசாயிகள் பதஞ்சலிக்கு நிலம் ஒதுக்கப்பட்ட விஷயத்தில் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர். விவசாயிகளிடம் இருந்து நிலம் வெறும் ரூ.3.5 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடம் தற்போது 45 லட்சம் ரூபாய் வரை விலைக்குப் போவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து நிலத்தை விற்று ஏமாற்றம் அடைந்த விவசாயி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "முன்பு நாங்கள் நிலத்தை வழங்கும்போது, ‘பெல்’ நிறுவனம் வரும், அவ்வாறு வரும்பட்சத்தில் எங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கலாம் என்று நினைத்து நிலத்தை வழங்கினோம்.

ஆனால் தற்போது அப்படி ஏதும் நிறுவனமும் அமையவில்லை, மாறாக தற்போது பதஞ்சலி நிறுவனம் தான் இங்கு வருகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அடிமாட்டு விலைக்கு வாங்கிய 400 ஏக்கர் நிலத்தில், பதஞ்சலி நிறுவனம் சோயா பீன்ஸ் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.