Viral

அரசு பேருந்தில் கியர் கம்பிக்கு பதில் மரக்குச்சி : அதிர்ச்சியில் மக்கள் !

தமிழகத்தில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் ஓட்டை, உடைசல்களாக தான் உள்ளன. மேலும் பல பேருந்துகள் போதிய பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுகிறது. சமீபத்தில் கூட தமிழக அரசு கூடுதலாக புதிய பேருந்துகளை இயக்குவதாக அறிவித்தது.

ஆனாலும் பழைய பேருந்துகளை சரி செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அடிக்கடி அரசு பேருந்து அதிக அளவில் விபத்தில் சிக்குவதாக என அரசு பேருந்து ஓட்டுனர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை சார்பில் 53 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதில் உள்ள பெரும்பாலான பேருந்துகள் பழுதான நிலையில், கோளாறுகளுடன் தான் இயக்கப்படுகிறது. அப்படி இயங்கும் பேருந்தில் மிக மோசமாக இயக்கப்படும் சேக்கிபட்டிக்கு செல்லும் அரசு பேருந்து தான்.

அந்த பேருந்தில் கியர் போடும் கம்பிக்கு பதில், மரக்குச்சியால் பேருந்து இயக்கப்படுகிறது. இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால், கியர் போடும் இடத்தில் மரக்குச்சியை நுழைத்து கயிற்றால் கட்டி வைத்து அந்த பேருந்து இயக்கப்படுகிறது. பேருந்து செல்லும் போது மரக்குச்சி கழன்று விழாமல் இருக்க பயணி ஒருவர் குச்சியை பிடித்துக்கொண்டு செல்கிறார். அந்த மரக்குச்சி கியரை பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பேருந்து ஓட்டுனரிடம் கேட்டபோது, பலமுறை சொல்லியும் அதிகாரிகள் மாற்றுப் பேருந்துகள் கேட்டிருப்பதாகவும், வருவதற்கு தாமதமாகும் என தெரிவித்தார். பல நாட்கள் ஆனபிறகும் புது பேருந்து எதுவம் வரவில்லை. அதனால் இப்படி இயக்கவேண்டிய நிலை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கூட, அரசு பேருந்தின் பின்புறம் 4 டயர்கள் பொருத்தப்படுவதற்கு பதிலாக 2 டயர்கள் மட்டுமே பொருத்தப்பட்டு இயக்கப்பட்டது. இதனால், அரசு பேருந்துகளில் பயணிக்க பொதுமக்கள் அச்சத்துடனே உள்ளனர். எனவே இதுபோன்ற பேருந்துகளை மாற்றிவிட்டு புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.