Viral

“இருக்குற கடுப்புல இவரு வேற...” - ஜெயக்குமார் பேச்சால் நொந்துபோன கிரிக்கெட் ரசிகர்கள் !

இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 262-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து கிரிக்கெட் ரசிகரான அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சிறு தோல்வியைச் சந்தித்தது போல இந்திய அணியும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்திய அணியும், அ.தி.மு.க-வும் தோல்வியிலிருந்து மீண்டு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியலையும் - விளையாட்டையும் கனெக்ட் செய்து சொல்லிவிட்டு ட்ரெண்டியாகப் பேசுவதாக நினைத்து அவரே புளகாங்கிதமடைந்திருக்கிறார். அதோடு நிறுத்தியிருந்தாலும் ரசிகர்கள் பொறுத்திருப்பார்கள்.

தொடர்ந்து பேசிய அவர், “நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்” என போகிறபோக்கில் ஒரு அணுகுண்டை எடுத்து மைக்குகளுக்குள் வீசியிருக்கிறார்.

“நாங்களே இந்தியா தோற்ற கடுப்புல இருக்கோம்; இவரு வேற நேரங்காலம் தெரியாம காமெடி பண்ணிக்கிட்டு..” என தலையில் அடித்துக்கொள்கின்றனர் நெட்டிசன்கள். ஜெயக்குமாரின் பேச்சு சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது.